விவசாயி படத்தை பார்த்தால் நீங்கள் விவசாயியா.. நான் கூடதான் 7 முறை பார்த்திருக்கேன்.. ஸ்டாலின் கலகல
வேலூர்: விவசாயி படத்தை பார்த்தால் நீங்கள் விவசாயி ஆகி விட முடியுமா என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலூர் தொகுதிக்கு வரும் 5-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் ஏசி சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகிய 3 பேர் போட்டியிடுகின்றனர்.
இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் முக ஸ்டாலின் , அமைச்சர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தனர்.
விவசாயக் குடும்பம்
இந்த நிலையில் வேலூரில் பிரசாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நான் ஒரு விவசாயி. எங்கள் குடும்பம் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தது. அதிமுகவில் சாதாரணமானவர்களும் முதல்வராகலாம் என்ற நிலை உள்ளது. இதனால் விவசாயியான நான் முதல்வராகிவிட்டது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
எதிர்ப்பு
இந்த நிலையில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதையொட்டி சத்துவாச்சாரியில் மு.க.ஸ்டாலின், கதிர்ஆனந்தை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவர் கூறுகையில் 8 வழிச்சாலையால் பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
துயர் துடைக்கவில்லை
ஆனால் தமிழக அரசோ 8 வழிச்சாலை மீதான தடையை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறது. தஞ்சை டெல்டா பகுதியில் ஹைட்ரோ காரபன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே விவசாயிகளின் துயரை துடைக்காமல் தானும் ஒரு விவசாயி என கூறிக் கொள்வதா?
எப்படி இருக்க முடியும்?
விவசாயி படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டால் உடனே விவசாயியா. நானும் எம்ஜிஆரின் தீவிர ரசிகன்தான். பள்ளிக் காலங்களில் 7 முறை விவசாயி படத்தை பார்த்துள்ளேன். டெல்டா பகுதியில் விவசாயிகள் பெறும் கஷ்டத்தை கண்டு கொள்ளாதவர் எப்படி விவசாயியாக இருக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.