பட்டாசு கடை தீவிபத்தில் இரு குழந்தைகளை பறிகொடுத்த தாய் தற்கொலை.. வேலூரில் சோகம்!
வேலூர்: வேலூரில் பட்டாசு கடை தீவிபத்தில் இரு குழந்தைகளை பறிகொடுத்த தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த லத்தேரியில் மோகன் (55) என்பவர் பட்டாசுக் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவரது பேரக் குழந்தைகள் தேஜஸ் (8), தனுஜ்மோகன் (6) ஆகியோர் இருந்தனர்.
இந்த நிலையில் பட்டாசு வாங்க வந்த ஒருவருக்கு பட்டாசை வெடித்து காண்பிக்க வெளியே வந்தார் மோகன். அப்போது வெடித்த பட்டாசுகளிலிருந்து தீப்பொறி கடைக்குள் சென்றுவிழுந்தது.

வெடித்து சிதறிய பட்டாசு
அப்போது மற்ற பட்டாசுகளும் வெடித்துச் சிதறின. உள்ளே குழந்தைகள் இருப்பதை அடுத்து பதறி போய் ஓடிய மோகன், குழந்தைகளை தூக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தார். அப்போது அனைத்து பட்டாசுகளும் வெடித்து சிதறியதால் மூவரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

பட்டாசுக் கடை
இந்த விபத்தத்தை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், அனைத்து வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்பு துறைகள் இணைந்து கள ஆய்வு மேற்கொள்ள உத்தவிரட்டுள்ளார். அதன்படி பட்டாசுக் கடைகளில் உரிமையாளர், பணியாளர்களை தவிர குழந்தைகள், உறவினர்கள் யாரையும் கடைக்குள் அனுமதிக்கக் கூடாது.

மாவட்ட ஆட்சியர்
அதிக சேதத்தை ஏற்படுத்தும் பட்டாசுகளை உடனடியாக அகற்ற வேண்டும். மே மாதம் இறுதி வரை கடைகளில் அதிக பட்டாசுகளை இருப்பு வைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இரு குழந்தைகள்
இந்த நிலையில் பட்டாசுக் கடை விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் தாய் வித்யாலட்சுமி (34). இவர் கணவனை பிரிந்து தந்தையுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் பட்டாசு விபத்தில் தந்தை, இரு குழந்தைகளையும் பறிகொடுத்த வித்யாலட்சுமி இரு தினங்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

சோகம்
இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வித்யா லட்சுமியை காலை முதல் காணவில்லை என உறவினர்கள் தேடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் லத்தேரி ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் லத்தேரி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications