MP யார் என்பதா முக்கியம்? பிரதமர் யார் என்பதே முக்கியம்! பாஜக பக்கம் நிற்கும் ஏ.சி.சண்முகம்!
வேலூர்: நாடாளுமன்றத் தேர்தலில் MP யார் என்பதா முக்கியம்? பிரதமர் யார் என்பதே முக்கியம் எனக் கூறி பாஜக ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்.
என்.டி.ஏ. கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறினாலும் கூட புதிய நீதிக்கட்சி பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியிலேயே தொடர்கிறது என்பதை அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஏ.சி.சண்முகம். கடந்த முறையை போல் இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதில் அவர் உறுதியாக உள்ளார்.

ஏ.சி.சண்முகத்தை பொறுத்தவரை பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி என ஏராளமன கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இதனால் எப்போதுமே மத்திய அரசுடன் சுமூக உறவை பேண விரும்பக் கூடியவர். அந்த வகையில் தான் நாடாளுமன்றத் தேர்தலில் MP யார் என்பதா முக்கியம்? பிரதமர் யார் என்பதே முக்கியம் எனக் கூறி தாம் பாஜக பக்கம் தான் என்பதை வேலூரில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
புதிய நீதிக்கட்சி சார்பில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். ஏ.சி.சண்முகத்தை போல் ஐஜேகே நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் கூட்டணி விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுக பக்கம் நிற்கப் போகிறாரா அல்லது அவரும் என்.டி.ஏ. கூட்டணியிலேயே தொடரப் போகிறாரா எனவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டதை போல் ஜெகத்ரட்சகன், பாரிவேந்தர் என ஏற்கனவே கல்வித் தந்தைகளாக அறியப்படுபவர்கள் எம்.பி.யாகி கடந்த தேர்தலில் டெல்லிக்கு சென்ற நிலையில் அந்த வரிசையில் இடம்பிடிக்க விரும்புகிறார் ஏ.சி.சண்முகம்.
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் ஏ.சி.சண்முகம் ஏற்கனவே அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆரால் அரசியலில் அடையாளம் காட்டப்பட்டவர்களில் ஏ.சி.சண்முகமும் ஒருவர். அவர் கொடுத்த லிஃப்ட் தான் ஏசிஎஸ்ஸை இந்தளவுக்கு வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வைத்தது. இதனால் தான் தனது கல்வி நிறுவன வளாகங்களில் எம்.ஜி.ஆர். சிலையை நிறுவி அதனை பராமரித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications