கடகடத்த கடப்பாறை.. துரைமுருகன் கைதா? எந்த வழக்குத் தெரியுமா?
வேலூர்: அமைச்சர் துரைமுருகனின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவரும் நிலையில், இது எந்த வழக்குத் தொடர்பானது? இதில் துரைமுருகனுக்கு என்ன தொடர்பு என்பது பற்றிய சந்தேகங்கள் எழுப்பி உள்ளனர்,
இன்று மதியம் 2 மணியிலிருந்து காட்பாடியில் உள்ள திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றன. இதனால் அரசியல் வட்டாரத்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சோதனைக்காக வந்த அதிகாரிகள் பூட்டப்பட்டுள்ள துரைமுருகனின் அறையைத் திறப்பதற்காகக் கடப்பாரையைக் கொண்டு சென்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

வீட்டைச் சோதனை செய்வதற்காக வந்த 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீரென்று ஒரு நபரைக் கடப்பாரைக் கொண்டு வரச் சொல்லி உள்ளனர். அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ஒருவர் வீட்டிற்கு மிகப்பெரிய கடப்பாரையைக் கொண்டு சென்ற காட்சி ஊடகங்களில் வெளியாகி வருகிறது. தரை தளத்தில் உள்ள அறைகளை முழுமையாகச் சோதனை செய்த அதிகாரிகள் முதல் மாடியில் உள்ள துரைமுருகனின் அறையைச் சோதனையிடுவதற்காகவே இந்தக் கடப்பாரை கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இதுமட்டும் இல்லாமல் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்திற்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் கடந்த 8 மணிநேரமாகச் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் திமுகவுக்கு மறைமுகமாக பாஜக அரசு நெருக்கடி கொடுக்க தொடங்கி உள்ளது என ஒரு குரல் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. ஒருவேளை இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டால் அமைச்சர் துரைமுருகன் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இது பற்றிப் பேசி இருக்கும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், "சிபிஐ ஒரு வழக்கை விசாரித்தால் குற்றச்சாட்டுக்கு உரியவரைக் கைது செய்ய நீதிபதியின் ஒப்புதல் தேவை. அதே வருமான வரித்துறையாக இருந்தால் வாரண்ட் போடுவதற்கு முன் அந்தத் துறையின் உயர் அதிகாரியிடம் ஒப்புதல் பெற வேண்டும். அமலாக்கத்துறைக்கு அந்தக் கட்டுப்பாடு தேவையில்லை. முன்பே ஒரு வழக்குப் பதியப்பட்டு இருந்தால்தான் இடி அந்த வழக்கைக் கையில் எடுக்கும். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை என்றால் கூட அதற்கு ஒரு உச்சவரம்பு உள்ளது. அதற்கு மேல் போனால்தான் இடி விசாரணையைக் கையில் எடுக்கும்.
கடந்த 2019 தேர்தல் நேரத்தின் போது 11 கோடி ரூபாய் பணம் பிடிபட்டது. அதற்காக இந்த சோதனையா என்றால் இல்லை. மணல் கொள்ளை தொடர்பாக ஏற்கெனவே இடி ஒரு விசாரணையை நடத்தி வருகிறது. அதற்காகப் பல ரெய்டுகள் நடந்தன. அதற்கு நீதிமன்ற தடையையும் முன்பே பெற்றன. அதை இடி உடைத்தது. அதன் தொடர்ச்சிதான் இப்போது துரைமுருகன் வீட்டில் இடி ரெய்டு நடக்கிறது.
ஏனென்றால் தேர்தல் நேரத்தில் பணம் பறிமுதல் செய்தது தொடர்பாகத் தேர்தல் ஆணையம்தான் அதில் வழக்குத் தொடர முடியும். அதற்குள் இடி வர முடியாது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை என்றால்தான் இடி நுழையும். ஏனென்றால் இதேபோல் நயினார் நாகேந்திரன் தரப்பில் தேர்தல் நேரத்தில் சில கோடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதற்குள் இடி வரவில்லையே? ஆகவே, இது மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் ஆவணங்களைத் தேடித்தான் ரெய்டு நடந்திருக்கும்" என்கிறார்.
இந்த ரெய்டு தொடர்பாக தனக்கு எந்தத் தகவலும் கொடுக்கப்படவில்லை. எந்தத் துறை சார்ந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள் என்பதே தனக்குத் தெரியாது என்கிறார் அமைச்சர் துரைமுருகன். ஆனால், சட்டப்படி சோதனைக்கு வரும் அதிகாரிகள் தாங்கள் எந்த இலாக்காவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலைக் கொடுத்த பிறகே நடவடிக்கைகளில் இறங்குவார்கள் என்கிறார்கள் இந்த மாதிரியான வழக்குகளில் அனுபவம் பெற்ற முன்னாள் அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications