"எல்லாம் மத்திய அரசு திட்டங்கள்.. திமுக ஸ்டிக்கர் ஒட்டி ஏமாற்றுகிறது!" விளாசும் பொன். ராதாகிருஷ்ணன்
வேலூர்: வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், திமுக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
வேலூர் மாவட்டம் அரப்பாக்கத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் பொன். ராதாகிருஷ்ணன், எல்.முருகன், கார்த்தியாயினி, நயினார் நாகேந்திரன், எச்.ராஜா ,உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பாஜக செயற்குழு கூட்டம்
இந்தக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பா இயற்கை விவசாயி நம்மாழ்வாருக்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கப் பாடுபட்டவர் என்றும் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்தவர் என்றும் புகழ்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொன் .ராதாகிருஷ்ணன்
பாஜக செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன் .ராதாகிருஷ்ணன் திமுக அரசைக் கடுமையாகத் தாக்கி பேசினார். செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன் .ராதாகிருஷ்ணன், "இயற்கை விவசாயி தமிழகத்தைச் சேர்ந்த நம்வாழ்வாருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளோம்.

ஸ்டிக்கர் ஒட்டும் திமுக
மத்திய அரசு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆனால் திமுக அரசு ஒத்துழையாமை செய்து வருவது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் திட்டங்களை திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி, தான் செய்ததாகக் கூறுவதும் ஏமாற்றும் வேலையாகும். கச்சத்தீவை மீட்க மேற்கொள்ளும் மத்திய அரசின் முயற்சிக்குப் பாராட்டு தெரிவிக்கப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.

கல்வியில் பின்தங்கும் தமிழகம்
தமிழ்நாடு கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்ட பொன். ராதாகிருஷ்ணன், தமிழில் மட்டும் 47 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி அடையாமல் தோல்வி அடைந்துள்ளனர் என்றும் இது தமிழுக்குப் பெருத்த அவமானம் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழக அரசின் செயல்பாடுகள் இப்போது சரியானதாக இல்லை என்றும் பொன். ராதாகிருஷ்ணன் சாடினார்,

சட்ட ஒழுங்கு
அதேபோல தமிழ்நாட்டின் தட்ட ஒழுங்கு நிலை மோசமாக உள்ளதாகவும் அவர் சாடினார். தமிழகத்தில் கஞ்சா,அபின் உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதாக விமர்சித்த பொன். ராதாகிருஷ்ணன், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுகிறது என்றும் போதைப் பொருட்களை முழுமையாகத் தடை செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார்.












Click it and Unblock the Notifications