"அவரு கிறிஸ்துமஸ், ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்வார்.. ஆனா தீபாவளிக்கு சொல்ல மாட்டார்!" தடதடத்த தமிழிசை
வேலூர்: வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சை விவாதத்தைக் கிளப்பி உள்ளது.
Recommended Video
வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி மஹாலில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் சார்பில் பாலாறு பெருவிழா நடந்து வருகிறது.
இதில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று கலந்து கொண்டார். மாநாட்டில் பங்கேற்ற பெண் துறவிகளுக்குச் சான்றிதழ்களையும் விருதுகளையும் வழங்கினார்.
மத்திய அமைச்சரா இருந்தாரே.. ப.சிதம்பரத்தால் தமிழ்நாடு அடைந்த பலன் என்ன.. தமிழிசை கேள்வி
தமிழிசை சௌந்தரராஜன்
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "காவிகள் இருக்கும் இடத்தில் அன்பு, அதிகாரம், பலம் அனைத்தும் இருக்கும். அனைத்து மதங்களையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஆன்மிகம் இல்லாமல் தமிழகம் இல்லை. ஆண்டாள் கற்றுக்கொடுத்த தமிழைத்தான் இன்று அனைவரது நாவிலும் தவழ்ந்து கொண்டிருக்கிறது. ஆழ்வார்கள் இல்லாமல் தமிழ் இல்லை. ஆன்மீகமும் காவியும் சேர்ந்ததுதான் தமிழகம் .
புதுச்சேரி மாடல்
ஆனால் தமிழகத்தில் காவிக்குச் சம்பந்தமில்லை என்ற நிலை உருவாக்க சில சக்திகள் செயல்பட நினைத்தனர். கொரோனா காலத்தில் புதுச்சேரி மாநிலத்தில் ஒரு கோவில் கூட மூடப்படவில்லை. திறந்த வழிபாட்டோடு தான் கொரோனாவை கட்டுப்படுத்தினோம். இதனைப் புதுச்சேரி மாடல் என்று கூடச் சொல்லலாம். அனைத்து மதத்தினரும் இறைவனைக் கும்பிட வேண்டும். ஒரு மதம் பற்றி மற்றொரு மதத்தினர் விமர்சிக்கக் கூடாது.
எது சுதந்திரம்
நான் நேரம் கிடைக்கும்போது எல்லாம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குப் போவதுண்டு. இன்னும் சொல்லப்போனால் நடராஜர் இயங்கிக் கொண்டிருப்பதனால் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அஞ்ஞானமும் சொல்கிறது. மெய்ஞானமும் சொல்கிறது. விஞ்ஞானமும் அதைத் தான் சொல்கிறது. நடராஜரை மோசமாக விமர்சிக்க முடியும் என்றால் அதுதான் சுதந்திரம் என்றால் அது சுதந்திரம் இல்லை.
மதங்கள்
அனைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற பரந்த மனப்பான்மை தான் அனைத்து மதமும் சொல்லிக் கொடுக்கிறது. இந்து மதமும் அதைத்தான் சொல்லிக் கொடுக்கிறது. சகிப்புத்தன்மை இருக்கிறது என்பதிற்காகச் சகிக்க முடியாத வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கொடுக்கும் மரியாதை தான் நாமெல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு மரியாதையாக இருந்து கொண்டிருக்கிறது.
பக்கத்து வீட்டு நண்பர்
எனக்குப் பக்கத்து வீட்டு நண்பர் ஒருவர் இருக்கிறார்.மத நல்லிணக்கம் எனப் பேசுகிறார். அவர், கிறிஸ்துமசுக்கு வாழ்த்து சொல்லுவார். ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்லுவார்.ஆனால் தீபாவளிக்கு மட்டும் வாழ்த்து சொல்ல மாட்டார். அவரை ஆதரித்தாலும் வாழ்த்து சொல்லமாட்டார் .. ஏனென்று கேட்டால் இதுவரை பதில் இல்லை" என்று அவர் தெரிவித்தார்
ஆளுநர் செயல்பாடுகள்
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, எந்தவொரு மாநிலத்தின் ஆளுநரும் தன்னிச்சையாகச் செயல்படவில்லை என்றும் அதிகாரத்துக்கு உட்பட்டு சூழ்நிலைக்கு ஏற்பவே செயல்படுவதாகவும் தெரிவித்தார். தானும் சரி மற்ற மாநில ஆளுநர்களும் சரி அப்படியே செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.