நாட்டை மெஜாரிட்டியுடன் ஆளும் கட்சி.. தனி மனிதனை கண்டு அஞ்சுகிறது.. துரைமுருகன் சொன்ன பாயிண்ட்!
வேலூர்: நாட்டை பெரும்பான்மையுடன் ஆளும் ஒரு கட்சி, தனி மனிதனைக் கண்டு அஞ்சுகிறதோ என்ற சூழ்நிலை அரசியல் நோக்கர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பியுள்ள ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தே ஆக வேண்டும் என்றும், அதனை படுக்கைக்கு அடியிலேயே வைத்திருக்க முடியாது என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் நடந்தது. வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் ஜூன் 3ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா துவங்க இருப்பதால் அதனை சிறப்பாக கொண்டாடுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேலூரில் தீர்மானம்
அதேபோல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டும் பூத் வாரியாக உறுப்பினர்களையும் பொறுப்பாளர்களையும் அமைப்பது, மாநகர ஒன்றிய பகுதிகளில் திமுக உறுப்பினர்களை சேர்ப்பது, ஈரோடு கிழக்கு தொகுதியின் வேட்பாளர் இளங்கோவன் வெற்றிக்காக பாடுபட்ட வேலூர் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி தெரிவிப்பது, மாதம் தோறும் இல்லத்தரசிக்கு ஆயிரம் ரூபாய் அறிவித்த முதல்வருக்கு நன்றியை தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துரைமுருகன் பேட்டி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து துரைமுருகன் கூறுகையில், ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது குற்றத்தின் அடிப்படையில் நடந்ததாக கருதவில்லை. நீண்ட நாள் வழக்கு நடந்து அதன் பின் அவருக்கு ஏற்பட்டிருக்கும் அந்த அவகாசத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் செல்ல வாய்ப்பு இருந்தது. நீதிமன்றம் கதவை திறந்தது. ஆனால் ராகுல் காந்தி அதை பயன்படுத்தும் முன்பே அவசர அவசரமாக இப்படிப்பட்ட தண்டனையை வழங்கி இருப்பது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல.

தனி மனிதனை கண்டு அச்சம்
நாட்டை பெரும்பான்மையுடன் ஆளும் ஒரு கட்சி, தனி மனிதனைக் கண்டு அஞ்சுகிறது என்ற சூழ்நிலை அரசியல் நோக்கர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. எல்லா தலைவர்களும் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியுள்ளார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து, மத்திய அரசு சிபிஐம் அமலாக்கத்துறைகளை தவறாக பயன்படுத்துவது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால் அது குறித்து எதுவும் பேச முடியாது என்று தெரிவித்தார்.

ஆன்லைன் ரம்மி தடை மசோதா
தொடர்ந்து ஆன்லைன் ரம்மி தடை மசோதா பற்றிய கேள்விக்கு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பியுள்ள ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தே ஆக வேண்டும். அதனை படுக்கைக்கு அடியிலேயே வைத்திருக்க முடியாது என்று தெரிவித்தார். முன்னதாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications