விஸ்வரூபம் எடுக்கும் ஆம்பூர் பிரியாணி திருவிழா மாட்டிறைச்சி தடை விவகாரம்.. பட்டியலின ஆணையம் நோட்டீஸ்
திருப்பத்தூர்: ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி இறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்ட விவகாரத்தை மாநில பட்டியலின ஆணையம் நோட்டீஸ் கையில் எடுத்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை முதல் வரும் 15ஆம் தேதி வரை மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஆம்பூர் பிரியாணி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மொத்தம் 5 பேர் இருக்கோம்.. போனை போட்டாலும் எடுக்கலயே ஏன்.. திராவிடமாடல்? ஸ்டாலினுக்கு செல்லூர் நறுக்
பிரியாணிக்கு என்று தனியாகத் திருவிழா நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கன்னிகாபுரம் என்ற இடத்தில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் இந்த திருவிழா நடைபெற இருந்தது.
மாட்டிறைச்சி தடை
இதனிடையே ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் என்ன உணவு வகைகள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது பீப் எனப்படும் மாட்டிறைச்சி பிரியாணிக்குத் தடை விதிக்கப்பட்டது தகவல் வெளியானது. ஆம்பூரில் பெரும்பாலான இடங்களில் மாட்டிறைச்சி பிரியாணி கிடைக்கும் நிலையில், ஆம்பூரில் நடைபெறும் விழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்குத் தடை விதிக்கப்பட்டது சர்ச்சையானது.
விடுதலை சிறுத்தைகள்
இதற்கு இணையதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பின. இதுமட்டுமின்றி, திமுக அரசின் கூட்டணிகளே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள், திருவிழா நடைபெறும் இடத்திலேயே மாட்டிறைச்சி பிரியாணியைப் பொதுமக்களுக்கு இலவசமாகவே வழங்குவோம் என அறிவித்தன. இதன் காரணமாக இந்த விவகாரம் மிகப் பெரிய அளவில் சர்ச்சையானது.
ரத்து
இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆம்பூர் பிரியாணி திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதாகவும் இதன் காரணமாக ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நோட்டீஸ்
இதனிடையே ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி மறுக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி பிரியாணி மறுக்கப்படுவது தீண்டாமைச் செயல் என்று புகார் எழுந்துள்ளதாக மாநில பட்டியலின ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தீண்டாமை கடைப்பிடிக்கப்படவில்லை என்றால் அது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு திருப்பத்தூர் ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.