பள்ளி மேஜையை அடித்து நொறுக்கிய மாணவர்கள்.. நேரடியாக தலையிட்ட மாவட்ட ஆட்சியர்.. முக்கிய ஆக்ஷசன்
வேலூர்: அரசுப் பள்ளியில் மாணவர்கள் மேஜையை உடைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் கடந்த சில காலமாகவே ஆசிரியர்களை மாணவர்கள் தரக்குறைவாகப் பேசுவது, அட்டகாசம் செய்வது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதிலும் குறிப்பாக கொரோனாவுக்கு பின்னர் பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்தே வருகிறது.

மேஜை சேதம்
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில், இங்கு +2 படிக்கும் மாணவர்கள் சிலர் வகுப்பறையில் உள்ள இரும்பு மேஜையை உடைத்துச் சேதப்படுத்தி உள்ளனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விசாரணை
அந்த வீடியோவில் அவர்களைச் சுற்றி இருக்கும் மாணவர்கள் இரும்பு மேஜையை உடைக்க உற்சாகப்படுத்துவதும் தெளிவாகப் பதிவாகி உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இணையத்தில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே இச்சம்பவம் குறித்து பாகாயம் போலீசார் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். மேலும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என்று மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கி உள்ளனர்.

என்ன காரணம்
+2 தேர்வு முடிய உள்ள நிலையில், ஃபேர்வெல் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று மாணவர்கள் கேட்டதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்த ஆத்திரத்தில் மாணவர்கள் இப்படி மேஜைகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளதாகப் பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். இதனிடையே வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனும் சம்மந்தப்பட்ட மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் அழைத்து விசாரணை செய்து அறிவுரை வழங்கினார்.

மாணவர்கள் சஸ்பெண்ட்
மாணவர்கள் இதுபோன்ற ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்று கூறிய மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், மீறி ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், சம்மந்தப்பட்ட 10 மாணவர்களை வரும் மே 5ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யவும் அவர் உத்தரவிட்டார்.

அடிக்க பாய்ந்த மாணவர்கள்
முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரேக்கார்ட் நோட் சமர்ப்பிக்கும்படி ஆசியர்கள் கூறியதால், பிளஸ் 1 மாணவர்கள் சிலர் மிரட்டினர். அவரை ஆபாசமாகப் பேசி, அடிக்க முயலும் அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், மொத்தம் 6 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications