வேலூரில் சொல்லி அடித்த வினோத் கண்ணன்: கிராஸ்ரூட் பிரசாரம் எப்படி வெற்றியாக மாறியது?
வேலூர்: திமுகவை வெல்லவே முடியாது என்கிற தொகுதி தான் வேலூர். ஆனால் இந்த வேலூர் தொகுதியில் இந்த முறை தேர்தல் சாதாரண போட்டியாக இல்லாமல், கவனிக்க வேண்டிய அரசியல் மாற்றமாக மாறியுள்ளது. த.வெ.க சார்பில் போட்டியிட்ட எம்.எம். வினோத் கண்ணன், தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ கார்த்திகேயனை வீழ்த்தி வெற்றி பெற்றது, உள்ளூர் அரசியல் வட்டாரங்களில் பெரிய பேசுபொருளாகியுள்ளது.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே வினோத் கண்ணன் மாறுபட்ட அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்தார். நேரடியாக மக்களை சந்திக்கும் "door-to-door" பிரசாரத்திலேயே அவர் அதிக கவனம் செலுத்தினார். தொகுதியின் அடிப்படை பிரச்னைகளை நேரில் கேட்டு, தீர்வுகளை வாக்குறுதி அளித்தது அவருக்கு பெரும் ஆதரவை உருவாக்கியது.

மக்களிடையே கிடைத்த இந்த வரவேற்பே, அவரது வெற்றியை முன்கூட்டியே கணிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இறுதியில், 6,777 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றது, அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது.
ஒரு சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்த வினோத் கண்ணன், வேலூரில் 'ஸ்ரீ மெமன்டோஸ்' என்ற பெயரில் விருது கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். அதோடு, 'அலமா அபாகஸ்' என்ற கல்வி நிலையத்தின் மூலம் குழந்தைகளுக்கு மனக்கணக்கு பயிற்சியும் அளித்து வருகிறார். பி.பி.ஏ பட்டதாரியான அவருக்கு எழிலரசி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
மேலும், வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயிலில் உள்ள நாராயணி பீடத்தின் மடாதிபதி சக்தி அம்மாவின் ஆசீர்வாதமும் அவருக்கு உள்ளது. வெற்றி பெற்றதும் நேராக பொற்கோயிலுக்குச் சென்று சக்தி அம்மாவிடம் ஆசீர்வாதம் பெற்றார்.
அதோடு, பிப்ரவரி 23ஆம் தேதி வேலூர் அகரம்சேரியில் நடிகர் விஜய்யை அழைத்து த.வெ.க நிர்வாகிகள் கூட்டத்தை பிரமாண்டமாக நடத்தியதும் வினோத் கண்ணன் தான். அந்த நிகழ்வில் விஜய்க்கு வெள்ளியில் செய்யப்பட்ட இரட்டை போர் யானைகள் மற்றும் பொற்கோயில் மாதிரி பரிசாக வழங்கப்பட்டது.
அப்போது, "இது வெறும் வெள்ளி யானை அல்ல, வேலூரின் வெற்றி யானை" என்று முழங்கிய த.வெ.க-வினர் கூறியதுபோல், தற்போது அந்த கணிப்பு நிஜமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications