வேலூரில் அம்மிகல் கொத்த போன வேளாங்கண்ணி.. மெக்கானிக் வீட்டுக்குள் போய்.. மிரள வைத்த சம்பவம்
வேலூர்: வேலூர் பழைய பைபாஸ் சாலையில் கார் மெக்கானிக் கடை வைத்துள்ள 38 வயதாகும் கோகுல் என்பவரது வீட்டில் 20 புவுன் தங்க நகையை திருடிய பெண் உள்பட இரண்டு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 7.5 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூரை அடுத்த பெருமுகை இந்திராநகரை சேர்ந்த 38 வயதாகும் கோகுல், வேலூர் பழைய பைபாஸ் சாலையில் கார் மெக்கானிக் கடை வைத்திருக்கிறார்.. இவருடைய மனைவி வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் காசாளராக வேலை செய்து வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி கணவன் -மனைவி இருவரும் வேலைக்கு சென்றுள்ளார்கள். அப்போது மர்மநபர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டில் இருந்த 20 பவுன் நகைகளை திருடிச் சென்றிருக்கிறது. கோகுல் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் நகை திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ந்து போனார்..
உடனடியாக வேலூர் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் கோகுல் வீட்டிற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணையை தொடங்கினார்கள்.
அதில், அந்த பகுதியில் ஸ்கூட்டர் ஒன்றில் ஒரு பெண்ணும், ஆணும் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. விசாரணையில் காஞ்சீபுரம் மாவட்டம் மேல்பாக்கம், பெத்தேரியை சேர்ந்த சக்திவேல் என்பவரது மனைவி வேளாங்கண்ணி (27), அதே பகுதியை சேர்ந்த குப்பை கரிமேடு சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த செல்வா (23) என்பதும், கோகுல் வீட்டில் நகையை திருடியதும் தெரியவந்தது. பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தார்கள்..
போலீசார் நடத்திய விசாரணையில், "கைதான இரண்டு பேரும் அம்மிகல் மற்றும் ஆட்டுக்கல் கொத்தும் தொழில் செய்து வாழ்ந்து வருபவர்கள். மொபட்டில் பல இடங்களுக்கு சென்று அம்மிக்கல் கொத்தி வந்துள்ளனர். அவர்களிடம் உளி, சுத்தியல், இரும்பு ராடு தொழில் நிமித்தமான கருவிகள் வைத்துள்ளார்கள்.
சம்பவம் நடந்த அன்று, வேலூர் பெருமுகை வந்த போது கோகுல் வீட்டில் யாரும் இல்லாததை கண்டு ஜன்னலை உடைத்து உள்ளே சென்று நகையை திருடி சென்றுள்ளனர். அவர்களிடம் இருந்து 7.5 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications