2 லட்சம் ஓட்டு வித்தியாசம்.. ஏமாத்தினா ஏமாந்துருவீங்க.. வேலூரில் சொன்ன உதயநிதி.. பதறிய கதிர் ஆனந்த்
வேலூர்: வேலூர் லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நீங்க ஏமாத்துனீங்கன்ன ஏமாந்து போயிருவீங்க” என்று கூறியிருந்தது சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் திமுக vs அதிமுக vs பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து வாணியம்பாடியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,
“இந்த வேலூர் தொகுதிக்கும் எனக்கும் மிகப்பெரிய நெருக்கம் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு திமுக உறுப்பினராக இருந்த நான் முதன் முதலாக சகோதரர் கதிர் ஆனந்துக்காக பிரச்சாரம் செய்தேன். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் என்னைத் தட்டிக்கொடுத்துக் கொடுத்து நன்றாக பிரச்சாரம் செய்து விட்டு வா என்று கூறி வாழ்த்தி அனுப்பினார். இன்று நான் எம்எல்ஏ, அமைச்சர் என்று உயர்ந்து உங்கள் முன்பு நிற்கிறேன்.
இப்போது கூட கதிர் ஆனந்திற்காக, அவர் எனக்கு சீனியர் என்பதற்காக அந்த உரிமையில்தான் நான் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். கடந்த லோக்சபா தேர்தலில் வெறும் 8000 வாக்கு வித்தியாசம்தான். ரொம்ப சோதித்து விட்டீர்கள். அது கொஞ்சம் வருத்தம்தான்.
இம்முறை கதிர் ஆனந்தை 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும். அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை டெபாசிட் இழக்க வைக்க வேண்டும். ஏனென்றால் இந்த வேலூர் தொகுதிக்கு கதிர் ஆனந்த் செய்துள்ள சாதனைகள் மகத்தானது. அதை ஞாபகம் வச்சிக்கங்க. நீங்க ஏமாத்துனீங்கன்ன ஏமாந்து போயிருவீங்க” என்று சொன்னார் பேசினார். உதயநிதியின் பேச்சில் லேசாக கலகலப்பு இருந்தாலும், மு.க.ஸ்டாலினை போலவே கறார் தன்மை இருந்ததை பார்த்து கதிர் ஆனந்த் லேசாக ஜர்க் ஆனார்.
தொடர்ந்து திமுகவின் சாதனைகளையும் பட்டியலிட்ட உதயநிதி, “திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லாத ஒன்றான காலை உணவு திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். என் குழந்தையை பார்த்துக்கொள்ள நம் முதலமைச்சர் அய்யா இருக்கிறார் என பெற்றோர்கள் பாராட்டுகின்றனர்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சாத்தியம் இல்லாத ஒன்று எனக்கூறினர். அதனை செய்துகாட்டியவர் முதலமைச்சர்தான். ஐபிஎல், அதிமுக இவை இரண்டும் ஒன்றுதான். ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, டிடிவி அணி, சசிகலா அணி என இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.

நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும் - சிறுபான்மையினர் உட்பட அனைத்து மக்களின் நலனை காக்கவும், எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை மிகப்பெரிய வெற்றி பெற வைக்கும் விதமாக, வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் சகோதரர் கதிர் ஆனந்த் ஆதரித்து வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
பிரச்சாரம் பற்றிய புகைப்படங்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள உதயநிதி, “ஊழலில் திளைக்கும் ஒன்றிய பாஜக அரசை அடியோடு அப்புறப்படுத்த இந்தியா கூட்டணியின் வெற்றிகாக தமிழ்நாடெங்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் சகோதரர் கதிர் ஆனந்தை ஆதரித்து குடியாத்தம் பகுதியில் உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தோம். இன்னாருக்கு இவை என்ற பாசிசம் ஒழிந்து எல்லாருக்கும் எல்லாம் என்ற முதல்வரின் குரல் இந்தியா முழுவதும் ஒலித்திட இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் படி கேட்டுக் கொண்டோம்” என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications