இது ஒரிஜினல்தானேம்மா.. கொடுங்க 4 சவரனை 8 பவுனாக்குகிறேன்.. அடுத்த நொடியே வேலையை காட்டிய மந்திரவாதி
திருப்பத்தூர்: மாமியார்-மருமகள் இடையே சண்டை தீர மாந்திரீகம் செய்வதாக கூறி 4 சவரன் நகையை ஏமாற்றி பறித்து சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கெங்காபுரம் பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்று காலை இளைஞர் ஒருவர் அப்பகுதி மக்களிடம் உள்ள பெண்களிடம் பேச்சு கொடுத்தார்.
அப்போது அவர் மாமியார்- மருமகள் சண்டைகள் தீரவும் வீட்டில் இருக்கும் நகைகளை இரட்டிப்பாக்க மாந்திரீகம் செய்து தருவதாக கூறியுள்ளார். நகையை கொண்டு வந்தால் இரட்டிப்பாக்கி கொடுப்பதாகவும் கூறியிருந்தார்.

4 சவரன் சங்கிலி
இதை நம்பிய அதே பகுதியை சேர்ந்த கவிதா எனும் பெண் தன்னிடம் இருந்த 4 சவரன் தங்க செயினை அந்த இளைஞரிடம் கொடுத்துள்ளார். அப்போது அவர் இது தங்கம்தானேம்மா, இல்லை எனது மாந்திரீகத்தை சோதனை செய்ய கவரிங் நகையை கொண்டு வந்தீர்களா என கேட்டுள்ளார்.

சுத்த தங்கம்
அதற்கு கவிதா , அய்யோ இல்லை இது சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்ட சங்கிலி. இது 4 சவரன். இதை 8 சவரனாக மாற்றிக் கொடுங்கள் என கேட்டுள்ளார். உடனே அந்த நபர் சுற்றி முற்றி பார்த்துள்ளார். அங்கு யாருமில்லை. உடனே அந்த 4 சவரன் நகையை எடுத்துக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டார்.

அதிர்ச்சி
இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா அழுது துடித்தார். பின்னர் பொதுமக்களின் உதவியுடன் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

சிசிடிவி கேமரா
பின்னர் போலீஸார் அங்கு வந்த பொதுமக்களை சமாதானப்படுத்தி அந்த நபரை எப்படியும் கைது செய்துவிடுவோம் என உறுதி அளித்தனர். அதன்பேரில் கவிதாவை அப்பகுதி மக்கள் ஆறுதல் கூறி அழைத்துச் சென்றனர். மேலும் இதுபோன்று யாராவது சொன்னால் அவர்கள் குறித்து போலீஸாருக்கு ரகசியமாக தகவல் கொடுத்தால் சம்பவ இடத்திற்கு வந்து போலி ஆசாமிகளை பிடித்துவிடுவோம் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications