ஹிஜாப் விவகாரம்... வேலூர் வீடியோவை யாரும் பரப்ப வேண்டாம்.. எஸ்பி எச்சரிக்கை
வேலூர்: வேலூர் ஹிஜாப் விவகாரம் குறித்து மாவட்ட எஸ்பி ராஜேஸ் கண்ணன் விளக்கம் அளித்துள்ளார். குறிப்பிட்ட மாணவி மற்றும் மாணவர் வீடியோவை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான வேலூர் கோட்டையில், இஸ்லாமிய பெண்கள் தங்களது நண்பர்களுடன் மதில் சுவரின் சுற்றுப்பாதையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

இஸ்லாமிய பெண்கள் அமர்ந்திருந்ததைக் கண்ட சில இஸ்லாமிய இளைஞர்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு எப்படி நீங்கள் வேறொரு ஆணுடன் ஊர் சுற்றலாம் என கேள்வி எழுப்பியதோடு மேலும் ஹிஜாப்பை அகற்ற வற்புறுத்தினார்கள். பின்னர் அந்த வீடியோவை அந்த நபர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்கள்
இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வீடியோவை எடுத்தவர்கள் மற்றும் அதனை பகிர்ந்தவர்கள் என மொத்தம் 7 பேரை கைது செய்தார்கள்.
இந்நிலையில் வேலூர் ஹிஜாப் விவகாரம் குறித்து மாவட்ட எஸ்பி ராஜேஸ் கண்ணன் விளக்கம் அளித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, வேலூர் கோட்டையில் நிரந்தரமாக காவல்துறை மூலம் ரோந்து மேற்கொள்ளப்படும் என்றும் கைது செய்யப்பட்டவர்கள் வீடியோ எடுக்கப்பட்டதற்கான நோக்கம் குறித்து புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றும் கூறினார். வீடியோவை யாரும் பரப்ப வேண்டாம் என்று அறிவுறுத்திய எஸ்பி, கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அச்சப்பட தேவையில்லை என்றார்.












Click it and Unblock the Notifications