"உங்க கூட வாழ்ந்ததே போதும்! நான் எங்கப்பா கூடவே போறேன்" வேலூரில் புதுமணப்பெண் தற்கொலை
வேலூர்: வேலூர் அருகே திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த கீழ்கொத்தூர் புதுமனை காலனி கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மனைவி வளர்மதி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் தமிழரசன். இவருக்கு 26 வயதாகிறது லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்த மீனாட்சி (22) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்த நிலையில் திருமணமான இருவரும் இல்லற வாழ்க்கையை இனிதாக கழித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென இவர்கள் வாழ்வில் புயல் வீசத் தொடங்கியது. அதாவது தமிழரசன் ஏற்கெனவே அவருடைய மாமன் மகளை திருமணம் செய்து கொண்டதும் அதை மறைத்தே தன்னை திருமணம் செய்து கொண்டதும் புதுப்பெண் மீனாட்சிக்கு தெரியவந்தது.
இதுகுறித்து தனது கணவரிடமும் மாமனார்- மாமியாரிடம் கேட்டுள்ளார். இதனால் குடும்பத் தகராறு முற்றியது. பிறகு பெரியவர்கள் எல்லாம் சமரசம் பேசி இந்த பிரச்சினையை முடித்து வைத்தனர். ஆனால் தமிழரசனுக்கு மீனாட்சி மீது சந்தேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில் நின்றால் சந்தேகம், நடந்தால் சந்தேகம் என்ற சூழல் நிலவியது. குடிக்காரன், பெண் சகவாசம் இருப்பவனுடனும் குடும்பம் நடத்திவிடலாம். ஆனால் இந்த சந்தேகம் பிடித்தவனுடன் குடும்பம் நடத்தவே முடியாது. நிறைய திருமணங்கள் கோர்ட் படியை மிதிப்பதற்கு காரணமே சந்தேக நோய்தான்.
கணவன் மனைவியை சந்தேகிப்பது, மனைவி கணவனை சந்தேகிப்பது! இப்படியான சம்பவம்தான் மீனாட்சியின் வாழ்விலும் நடந்தது. தமிழரசனின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்ததாம். ஒரு கட்டத்தில் பொறுத்துக் கொள்ள முடியாது, போதும் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு மீனாட்சி தள்ளப்பட்டார்.
இதையடுத்து மீனாட்சி ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது கணவருக்கு ஆடியோ மெசேஜ் அனுப்பி வைத்துவிட்டும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அடுத்த நாள் தமிழரசன் வேலைக்கு சென்றுவிட்டு காலையில் வீட்டிற்கு வந்த போது மீனாட்சி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டிருந்தார்.
இதையடுத்து தமிழரசன் கூச்சல் போட்டதை அடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீனாட்சியை மீட்டனர். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மீனாட்சியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மீனாட்சியின் வீட்டில் தேடிய போது போலீஸாருக்கு அவருடைய தற்கொலை கடிதம் சிக்கியது.
அந்த கடிதத்தில் நான் ஏற்கெனவே இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்றேன். ஆனால் என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தீர்கள். நான் நிம்மதியாக இல்லை. என் அப்பாவிடமே சென்று விடுகிறேன். என் கணவர் தமிழரசனை ஒன்றும் செய்யாதீர்கள். அவராவது நிம்மதியாக இருக்கட்டும். நான் சாக போகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
அது போல் மீனாட்சியின் செல்போனை ஆராய்ந்த போது அதில் கணவருக்கு அனுப்பிய ஆடியோ இருந்தது. அதில் மீனாட்சி அழுதுக் கொண்டே ,"நீங்கள் என் மீது ரொம்ப சந்தேகப்படுறீங்க. ரொம்ப சந்தேகம் பிடிக்க ஆரம்பிச்சிட்டீங்க, இப்படியே போயிகிட்டு இருந்தால் லைஃப்பை வாழவே முடியாது. காலையில் நீங்கள் வந்து பார்த்தால் கூட நான் உயிரோடு இருக்க மாட்டேன்.
நான் ஏற்கெனவே பெனாயில் எல்லாம் குடித்துவிட்டேன். நான் சாக போகிறேன். யாரையாவது கல்யாணம் செய்துகொண்டு நிம்மதியாக இருங்கள். போதும் உங்க கூட வாழ்ந்தது, நான் போய் சேரேன். எங்கப்பா கூடவே போய் சேருகிறேன் என கண்ணீர் மல்க மீனாட்சி பேசும் ஆடியோ நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. திருமணமாகி 6 மாதங்கள் மட்டுமே நடைபெறுவதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications