வேலூரில் வரதட்சணை கொடுமை! ஆம்புலன்ஸில் வந்து புகார் அளித்த 21 வயது பெண்! கணவன் கைது
வேலூர்: வேலூர் அருகே கூடுதல் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாகக் கணவர் மீது புகார் கூற, ஆம்புலன்ஸில் ஸ்ட்ரெச்சரில் படுத்தபடியே ஒரு பெண் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணை மாடியிலிருந்து கணவர் தள்ளிவிட்டதாகவும், அதனால் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டதாகவும் அவர் புகார் தெரிவித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் கணவரைப் காவல்துறையினர் கைது செய்தனர்.
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆம்புலன்ஸில் படுத்தபடியே நர்கீஸ் (21) என்ற இளம்பெண் மனு அளித்தார். இது தொடர்பாக அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

"எனது சொந்த ஊர் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுகா, மேல்நெல்லி கிராமம் ஆகும். எனக்கு திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா பகுதியைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவரின் மகன் காஜா ரபீக் என்பவருடன் கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது வரதட்சணையாக 30 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் ரொக்கம், 500 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.3 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைப் பொருட்கள் கொடுத்து என் பெற்றோர் என் திருமணத்தைச் சீரும் சிறப்புமாக நடத்தியிருந்தனர்.
கேலி செய்த குடும்பத்தினர்
இந்த நிலையில், கணவர் குடும்பத்தினர் என்னைக் கேலி, கிண்டல் செய்து கொடுமைப்படுத்தி வந்தனர். நான் குறைந்த சவரனில் நகை போட்டதாகக் கூறி என்னைத் துன்புறுத்தினர். என்னை வீட்டுப் பணிப்பெண் போல் நடத்தினர். மேலும், கூடுதல் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தினர்.
தனிக்குடித்தனம்
இதனால் எனது கணவரை அழைத்துக்கொண்டு வேலூர் சதுப்பேரி முல்லை நகரில் கடந்த பிப்ரவரி மாதம் குடியேறினேன். அப்போதும் எனது மாமனாரின் தூண்டுதலின் பேரில் என் கணவர் என்னை அடித்துத் துன்புறுத்தினார். இதுகுறித்து என் தந்தையிடம் தெரிவித்தேன். இதனால் ஆத்திரமடைந்த என் கணவர், மாமனாருடன் செல்போனில் பேசியவாறு மொட்டை மாடிக்குச் சென்றார்.
மொட்டை மாடி
நானும் அவரிடம், 'எனது தந்தையிடம் எதுவும் கூற மாட்டேன்' எனத் தெரிவித்தபடி பின்னால் சென்றேன். அப்போது மொட்டை மாடியில் சுவர் ஓரத்தில் நின்றிருந்த என்னை, கணவர் திடீரெனக் கீழே தள்ளிவிட்டுவிட்டார். இதனால் எனக்கு இடுப்பு எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. கால் எலும்பும் முறிந்துவிட்டது. என்னால் எழுந்து உட்காரும் சூழல் இல்லை.
மருத்துவமனையில் சிகிச்சை
இதையடுத்து, வலியால் துடித்த என்னை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது நான் சிகிச்சை பெற்று வருகிறேன். கணவர் வீட்டில் இருந்து இதுவரை என்னை யாரும் பார்க்க வரவில்லை. எனக்கு சிகிச்சைக்காக ரூ.6 லட்சத்திற்கும் மேல் செலவாகிவிட்டது.
நடவடிக்கை கோரிய நர்கீஸ்
அரியூர் காவல்துறையில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்," என அந்த மனுவில் நர்கீஸ் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, அவரைப் பார்க்க ஆட்சியர் சுப்புலட்சுமி, ஆம்புலன்ஸ் இருந்த இடத்திற்கு வந்தார். அங்கு நர்கீஸுக்குத் தைரியம் சொன்ன அவர், மனுவைப் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
காஜா ரபீக் கைது
இந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து அரியூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து காஜா ரபீக்கைக் கைது செய்தனர். விசாரணையில், அவர் மரைன் இன்ஜினியரிங் படித்துவிட்டு ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications