கூவத்தூர் ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள் தங்க உதவியவர்.. சசிகலாவின் அபிமானி?.. யார் இந்த அசோகன்?
வேலூர்: லஞ்ச புகாரில் சிக்கிய திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அசோகன் வீட்டில் கைப்பற்றிய சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
திருவாரூர் மாவட்டம் மேலஎருக்காட்டூரைச் சேர்ந்தவர் அசோகன். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறையின் பேராசிரியராக 2000 ஆம்ஆண்டு பணியில் சேர்ந்தார்.
அதிமுக ஆட்சியில் சசிகலாவின் அபிமானியான இவர் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 2013-ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி முதல் 2017 ஆம் தேதி வரை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக பணியில் சேர்ந்தார்.

நிதி அலுவலர்
அப்போது இவர் பதிவாளர், நிதி அலுவலராக தற்காலிக பொறுப்பிலும் இருந்துள்ளார். மேலும் சில நாட்களுக்கு துணை வேந்தர் பொறுப்பிலும் இருந்துள்ளார். அப்போது பல்வேறு மோசடிகளில் இவர் ஈடுபட்டுள்ளதாக 30-க்கும் மேற்பட்ட புகார்கள் எழுந்தன. இதனால் இவர் அந்த பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பொறுப்பில் இருந்து 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி அவர் விடுவிக்கப்பட்டார்.

அரசு கல்லூரி
பின்னர் திருவாரூர் அரசு கல்லூரியில் பேராசிரியாக சேர்ந்தார். இவர் மீதான மோசடி புகார்கள் குறித்து விசாரிக்கும் படி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் அதே ஆண்டு 28 ஆம் தேதி ஓய்வு பெறும் நாளில் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து காட்பாடி விஜி ராவ் நகரில் உள்ள பங்களாவில் இரண்டாவது மனைவி ரேணுகாதேவியுடன் வசித்து வந்தார்.

விசாரணை
வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய விசாரணையில் அசோகனும் ரேணுகாதேவியும் வருமானத்திற்கு அதிகமாக ரூ 53. 50 லட்சம் சொத்து சேர்த்ததாக அதாவது 63 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்தது உறுதியானது. இதையடுத்து அவர்கள் இருவரின் மீது கடந்த 4 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இவரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தினர்.

சொத்து பத்திரங்கள்
அப்போது பணம், நகை, சொத்து பத்திரங்களை கைப்பற்றியதாக தெரிகிறது. இவரது பதவியில் இருக்கும் போதே தங்க நகைகள், வெள்ளிக் கட்டிகளை வாங்கி குவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தற்காலிக முதல்வராக பன்னீர் செல்வம் பதவியேற்ற போது கூவத்தூர் பங்களாவில் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்ட போது அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் அசோகன்தான் செய்து கொடுத்தார் என தெரிகிறது.

அரசு கல்லூரி
இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் பேராசிரியராக இருந்த போதே அங்கு பணியாற்றிய வசந்தகுமாரியை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து திருவாரூரில் பணியாற்றிய போது தன்னிடம் படித்த மாணவி ரேணுகாதேவியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதில் அந்த மாணவி கர்ப்பமானார். இவரை திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தார். இதையடுத்து மாணவர்கள், பெற்றோர் செய்த போராட்டத்தால் ரேணுகாவை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சொத்து பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications