மயங்கிய நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா-பகீர் தகவல் அம்பலம்
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு மயங்கிய நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு மயங்கிய நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து 72 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர். ஜெயலலிதாவை போயஸ் கார்டன் வீட்டில் சசிகலா குடும்பத்தினர் தாக்கியதாக ஓபிஎஸ் அணியினர் குற்றம்சாட்டியிருந்தனர்.
விசாரணை ஆணையம்
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய ஓபிஎஸ் தரப்பு இதுகுறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியது. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிட்டது தமிழக அரசு.
பேஷன்ட் கேர் அறிக்கை
இந்நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் முக்கிய அறிக்கையான பேஷன்ட் கேர் அறிக்கையை புதிய தலைமுறை தொலைக்காட்சி இன்று வெளியிட்டது. அதன்படி செப்டம்பர் 22ஆம் தேதி 10.15 மணிக்கு போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா மயங்கிய நிலையில் பேசமுடியாமல் இருந்தது தெரியவந்துள்ளது.
மயங்கிய நிலையில்
இதையடுத்து 10.30 மணிக்கு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது ஜெயலலிதா மயங்கிய நிலையிலேயே இருந்ததும் தற்போது அம்பலமாகியுள்ளது.
அவசர சிகிச்சைப்பிரிவு
மேலும் ஜெயலலிதா நிமோனியா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததும், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு ஆகியவை அதிகரித்து இருந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.