சிறுமிகள் பலாத்கார வழக்கு... அதிமுக நிர்வாகி உள்பட 5 பேர் கைது.. தொடரும் கைதுகளால் பரபரப்பு- வீடியோ
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி போலீஸ் ஸ்டேஷனில் கடந்த ஆகஸ்ட் மாதம், ஒரு கும்பல் தங்களைக் கட்டாயப் படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக இரண்டு சிறுமிகள் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக சில முக்கிய பிரபலங்களின் பெயர்களையும் அச்சிறுமிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர், காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார், நகராட்சி வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், வியாபாரி செல்வராஜ், பழனியப்பன் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், நேற்று இந்த வழக்கு தொடர்பாக கழனிவாசலை சேர்ந்த, பெட்ரோல் பங்க் ஊழியர் விக்னேஷ்வரன் (25), மீனாட்சிபுரத்தை சேர்ந்த சோப்பு வியாபாரி கமாலுதீன்(42), புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த கடலை வியாபாரி தங்கராஜ், அவரது மனைவி சித்ரா, அதிமுக சிறுபான்மை பிரிவு நகரச் செயலாளர் முத்து முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்தடுத்த கைதுகளால் இந்த வழக்கு சூடு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.