ஆசையாக நாவல் பழம் பறிக்கப்போன 3 பிஞ்சுகளுக்கு நேர்ந்த விபரீதம்.. திண்டிவனம் அருகே சோக சம்பவம்!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, நாவல் பழம் பறிக்கச் சென்ற 2 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் என 3 பேர் ஆற்றில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கோனேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் சஞ்சய் (10), மாரிமுத்து என்பவரின் இரண்டு மகள்கள் பிரியதர்ஷினி (10) சுபஸ்ரீ (8) ஆகிய மூவரும் கோனேரிகுப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.

வழக்கம்போல் இன்று பள்ளிக்கு சென்ற மாணவ மாணவிகள், இன்று மாலை பள்ளி முடிந்தபிறகு, வீட்டிற்கு சென்று அங்கிருந்து நல்லாத்தூரில் இருந்து ஓங்கூர் செல்லும் ஓடையில் உள்ள நாவல் மரத்தில் நாவல்பழங்களை பறித்து வருவதற்காகச் சென்றுள்ளனர்.
தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அந்த ஓடையில் நீர் அதிக அளவில் செல்வதாக கூறப்படுகிறது. நாவல் பழம் பறிக்கும்போது எதிர்பாராத விதமாக அவர்கள் மூவரும் தவறி ஓடையில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அந்த வழியாக சென்ற ஒருவர், ஒரு குழந்தையின் பள்ளி சீருடை மட்டும் நீரில் மேலே தெரிந்ததைப் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஒலக்கூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
இந்த தகவலின் பேரில் ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஓடையில் தேடிய நிலையில், மூன்று குழந்தைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். நாவல் பழம் பறிக்கச் சென்ற பள்ளிச் சிறார் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வேதனை தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பத்தில் நாவல் பழம் பறிக்கச் சென்ற சஞ்சய், பிரியதர்ஷினி, சுபஸ்ரீ ஆகிய 3 குழந்தைகள் ஓடை நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். குழந்தைகளை இழந்து வாடும் அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications