கேலி செய்த வகுப்புத் தோழர்கள்.. 7ம் வகுப்பு மாணவிகள் 5 பேர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி
வகுப்புத் தோழர்கள் கேலி செய்ததால், 7ம் வகுப்பு மாணவிகள் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்: விழுப்புரம் அருகே 7ம் வகுப்பு மாணவிகள் ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது அரசம்பட்டி. இங்குள்ள மலைவாழ் உண்டு உறைவிடப்பள்ளியில் 172 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

நேற்று இப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் அதே பகுதியை சேர்ந்த மாணவிகள் 5 பேர் எலி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். மயங்கிய நிலையில் இருந்த அவர்களை மீட்டு அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
முதலுதவி சிகிச்சைக்குப் பின், அவர்கள் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் சகமாணவர் ஒருவருடன் இணைத்து, அனைவருக்கும் தெரியும்படி கரும்பலகையில் எழுதி, வகுப்புத் தோழர்கள் கேலி செய்ததால், அம்மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாக தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications