சொல்றத கேளு..தூபம் போட்ட அண்ணி..மண்டைக்கேறிய மதுபோதை! தீயில் கருகிய ஆசை மனைவி! வெலவெலத்த விழுப்புரம்
விழுப்புரம் : விழுப்புரம் அருகே அண்ணியின் பேச்சைக் கேட்டு குடிபோதையில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கணவனே கொடூரமாக எரித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
குடும்ப வன்முறையால் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணியில், பொது இடம் என வீட்டிற்கு வெளியே பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் பெண்கள் வீட்டிற்குள்ளேயும் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்பது போல மாமியார் மற்றும் கணவரின் உறவினர்களால் வரதட்சணை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கை கூட ஆயிரத்தை தாண்டும். அந்த வகையில் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் அரங்கேறியிருக்கும் ஒரு கொடூர சம்பவம்தான் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

வரதட்சணை கொடுமை
விழுப்புரம் அருகே பிடாகம் என்ற பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமாருக்கும் பரமேஸ்வரி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் கடந்த போதிலும் அவர்களுக்கு குழந்தை பேறு இல்லை. மேலும் திருமணத்தின் போது பரமேஸ்வரியின் வீட்டார் சீர் வரிசை சாமான்கள் மற்றும் 3 சவரன் தங்க நகைகள் மட்டுமே வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கணவன் தகராறு
மேலும் மணமகனுக்கு இருசக்கர வாகனம் வாங்கி தருவதாகவும் கூறியுள்ளனர். ஆனால் தற்போது வரை இரு சக்கர வாகனத்தை வாங்கி தரவில்லை. இதனால் கணவன் ரஞ்சித் குமாரும் அவரது தாய் ராணி என்பவர் பரமேஸ்வரியை வரதட்சணை பெற்று வர வேண்டும் என அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மது அருந்த வேண்டும் என மனைவி பரமேஸ்வரிடம் ரஞ்சித் குமார் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். தன்னிடம் பணம் இல்லை என அவர் கூறியதையடுத்து தாய் ராணியிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அருகில் உள்ள மதுக்கடைக்குச் சென்றுள்ளார்.

தூபம் போட்ட அண்ணி
பின்னர் சிறிது நேரம் கழித்து தலைக்கேறிய மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார் ரஞ்சித், அப்போது அவருடைய அண்ணியான கோமதி என்பவர் என்னுடைய திருமணத்தின் போது எனக்கு 15 சவரன் தங்க நகைகள் வரதட்சணையாக கொடுத்தார்கள் ஆனால் அதே போல் நீ ஏன் வாங்கி வரவில்லை என்று பரமேஸ்வரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த ரஞ்சித்குமார் அண்ணியின் பேச்சைக் கேட்டு மனைவியிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மது போதை கண்ணை மறைக்க ஆத்திரமடைந்த ரஞ்சித் குமார் மகேஸ்வரியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.

கொடூர குடும்பம்
உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்த நிலையில் தெருவில் அலறி அடித்து ஓடிய பரமேஸ்வரியை கண்டு அதிர்ந்து போன அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பரமேஸ்வரி உயிருக்கு போராடி வரும் நிலை அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த அளவில் வரதட்சணை கொடுமை மற்றும் கொலை முயற்சி புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் ரஞ்சித் குமார் தாயார் ராணி அண்ணி கோமதி ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். வெறும் வரதட்சணைக்காக மனைவியை கணவனே தீவைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications