100 நாள் வேலை.. கிடா வெட்டி பிரியாணி விருந்து.. இன்ப அதிர்ச்சி கொடுத்த ஊராட்சி தலைவர்
விழுப்புரம்: 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த கிராமத்தினருக்கு திடீரென இன்ப அதிர்ச்சி தரும் வகையில் பணிபுரிபவர்களுக்கு கிடா வெட்டி பிரியாணி விருந்து வைத்துள்ளார் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே இப்படி ஒரு நெகிழவான சம்பவம் நடந்துள்ளது.
அவர் பிரியாணி விருந்து வைத்ததர்களுக்கு சொன்ன காரணம் தான் உண்மையில் நெகிழ்ச்சியானது. அதாவது 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு எந்த அசம்பாவிதங்களும் ஏற்பட கூடாது என்று நினைத்திருக்கிறார் ஊராட்சி மன்ற தலைவர். அதற்கு இறைவனிடம் வேண்டிவிட்டு அய்யனாரப்பனுக்கு கிடா வெட்டி பூஜை செய்து பிரியாணி கொடுத்துள்ளார்,

100 நாள் வேலை திட்டம் என்பது இந்தியாவில் கிராமப்புறங்களில் உள்ள வயது முதிர்ந்த மற்றும் கைவிடப்பட்ட முதியாருக்கும், பெண்களுக்கும் சுயமரியாதையுடன் பணம் தரும் திட்டமாக உள்ளது. மாதத்தில் 3 முதல் 4 நாட்கள் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் வரும் வகையில் வேலை தரப்படுகிறது.
இந்த மாதம் ஆயிரம் தொகையுடன் முதியோர் உதவி தொகை ஆயிரம் ரூபாய் (இனி 1200) அவர்கள் யாருடைய எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ உதவுகிறது. இது தவிர ஏழை பெண்கள் பலர் இந்த 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்து கூலி வேலைகளை செய்து வருகிறார்கள். அவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய் அளவிற்கு ஊதியம் கிடைக்கிறது.
அதேநேரம் 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காமல் பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டும் உள்ளது. ஆனால் 100 நாள் வேலைகளை அந்த கிராமத்தில் வேலை இல்லாத நாட்களில் வடிவமைத்தால் சிறப்பாக இருக்கும் என்பதால் அதற்கான சூழல்களை மாற்றினால் சிறப்பாக இருக்கும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ஆசூர் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன். இவர் தேமுதிகவைச் சேர்ந்தவர் ஆவார். இவரது கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் குளம், வாய்க்கால், ஏரி போன்றவைகல் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பாக பணி புரியவேண்டும், பணியின் போது அவர்களுக்கு எந்த அசம்பாவிதங்களும் ஏற்பட கூடாதென்ற நோக்கத்தில் அய்யனாரப்பனுக்கு கிடா வெட்டி பூஜை செய்ய நினைத்துள்ளார் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன்.
அதன்படியே இன்று அய்யனாரப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து 8 கிடா வெட்டி மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு தலை வாழை இலை போட்டு பிரியானி விருந்து வைத்திருக்கிறார் ஞானசேகரன்.
ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்து கடவுளிடம் வேண்டி, கிடா வெட்டி பிரியாணி விருந்து வைத்த சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications