ராமதாஸ் கொடுத்த விருந்தின் மகிழ்ச்சி கூட மறையாத நிலையில் அதிமுக சந்தித்த துயரம்!
Recommended Video
விழுப்புரம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கொடுத்த விருந்து நிகழ்ச்சியின் மகிழ்ச்சி கூட மறையாத நிலையில் அதிமுக பெரும் துயரத்தை ராஜேந்திரன் மரணத்தின் மூலம் சந்தித்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால், விழுப்புரம் தொகுதிக்கு வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றவர் ராஜேந்திரன்.
ராஜேந்திரன் 1956ம் ஆண்டு பிறந்தார். வானூர் ஒன்றியம் ஆதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்பராயன் - பாக்கியம் தம்பதியின் மகன்தான் ராஜேந்திரன். ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். இவர் அடிப்படையில் ஒரு விவசாயி ஆவார்.
குடும்பம்
இவர் பி.ஏ படித்துள்ளார். தற்போது குடியிருந்து வந்தது சென்னையில்தான். இவரது மனைவி சாந்தா ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திவ்யா, தீபிகா என இரு மகள்களும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.
விவசாயி
நீண்ட காலமாக அதிமுகவில் இருந்து வரும் இவர் 2001 முதல் 2006 வரை விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக இருந்துள்ளார். தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட விவசாய அணிச் செயலாளராக இருந்தார். இது போக மாவட்ட ஊராட்சிக்குழு 29ஆவது வார்டு உறுப்பினராகவும் இருந்தார்.
முதல்முறை
ராஜேந்திரன் ஒருமுறை கூட எம்எல்ஏவாக இருந்து கூட பழக்கப்பட்டது கூட கிடையாது. முதல் முறையாக எம்பி பதவிக்கு போட்டியிட்டு வெற்றியும் பெற்றவர்.
கறிச்சோறு விருந்து
பாமகவுடன் அதிமுக கூட்டணி அமைந்ததையொட்டி நேற்று இரவு ராமதாஸின் தைலாபுரம் வீட்டில் விருந்து கொடுக்கப்பட்டது. கறிச்சோறுடன் நடந்த விருந்தில் ராஜேந்திரன் கலந்து கொண்டு திரும்பினார். இந்த விருந்தின் மகிழ்ச்சி கூட மறையாத நிலையில் அவர் கார் விபத்தில் பலியாகியிருப்பது அதிமுக மற்றும் பாமகவினரை அதிர வைத்துள்ளது.