துரோகத்தின் மறுபெயர் பண்ருட்டி ராமச்சந்திரன்.. பதவி ருசி கண்ட பூனை ஓபிஎஸ்.. கொந்தளித்த சிவி சண்முகம்
துரோகத்தின் மறுபெயர் பண்ருட்டி ராமச்சந்திரன் என்று சிவி சண்முகம் விமர்சித்துள்ளார்.
விழுப்புரம்: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதவி ருசி கண்ட பூனை என்றும், அதிமுகவை குறை சொல்வதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை என்று அதிமுக மாநிலங்ளவை உறுப்பினர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். அதேபோல் பண்ருட்டி ராமச்சந்திரன் சென்ற எந்த இடமும் விளங்கியதில்லை என்று கூறிய அவர், துரோகத்தின் மறுபெயர் பண்ருட்டி ராமச்சந்திரன் என்று கடுமையாக விமர்சித்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்களத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் சிவி சண்முகம் பேசுகையில், அதிமுகவால் சட்டமன்ற உறுப்பினர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், கழக ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை அனுபவித்த ருசி கண்ட பூனை ஓ.பன்னீர் செல்வம்.

பதவி ருசி கண்ட பூனை
இன்று தன்னையும் தன் குடும்ப சொத்துக்களையும் பாதுகாக்க அதிமுகவை குறை சொல்லிக்கொண்டு வருகிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தேர்தல் தோல்வி குறித்து ஓபிஎஸ் விமர்சிக்கிறார். கடந்த 2021 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் சொந்த பகுதியான தேனியில் ஒரே தொகுதியில் மட்டுமே பன்னீர்செல்வத்தால் வெற்றி பெற முடிந்தது.

ஓபிஎஸ்-க்கு தகுதியில்லை
பல்வேறு பதவிகளை வைத்துக்கொண்டு அவரால் ஒரு தொகுதியில் மட்டுமே ஜெயிக்க முடிந்தது. பிற தொகுதிகளில் ஜெயிக்க அருகதையற்ற அவருக்கு அதிமுகவை குறைசொல்ல எந்தத் தகுதியும் இல்லை. கடந்த காலத்தில் ஓபிஎஸ் சொந்த தொகுதியான ஆண்டிப்பட்டியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஜெயிக்க முடியவில்லை.

பல துரோகிகள்
அப்போது ஆட்சியை நிலை நிறுத்த அத்தொகுதி இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியாத ஓபிஎஸ் அதிமுகவின் தோல்வியை குறித்து குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை. ஓபிஎஸ் முகமூடி கிழிக்கப்பட்டுள்ளது. பதவி வெறி பிடித்த மனிதர் அவர். ஓபிஎஸ் மட்டுமல்ல, அதிமுகவை ஒழிக்க துரோகிகள் பல பேர் உள்ளனர்.

பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு ஆமை
அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து ஓபிஎஸ் போன்று பல்வேறு துரோகிகளின் நிலை என்ன ஆயிற்று? ஓபிஎஸ் விளங்காமல் போக பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டுமே போதும். அவர் சென்ற எந்த இடமும் விளங்கியதில்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு ஆமை. அது புகுந்த இடம் எப்போதும் விளங்கியதில்லை. துரோகத்தின் மறுபெயர் பண்ருட்டி ராமச்சந்திரன் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications