முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பாக ’இதை’ செய்தே ஆகனும்.. பெரியார் பிறந்த நாளில் அன்புமணி முக்கிய கோரிக்கை!
விழுப்புரம்: பெரியார் பிறந்த நாளில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த தமிழக முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் எனவும், சமூக நீதிக்கான அநீதிகளை ஆளும் திமுக செய்து வருகிறது என பாட்டாளி மக்கள் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் அமைந்துள்ள பாமக அரசியல் பயிலரங்கத்தில் உள்ள பெரியார் சிலைக்கு அவர் பிறந்தநாளையொட்டி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளின் நினைவு நாளை முன்னிட்டு உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அன்புமணி ராமதாஸ்.
அப்போது பேசிய அவர்,” இன்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 146 வது பிறந்த நாளையொட்டி அவரின் உருவசிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களும், நானும் மரியாதை செலுத்தி அவரின் கனவை நனவாக்க உறுதியேற்றுள்ளோம். அவரின் கொள்கையை முழுமையாக ஏற்ற கட்சி பாமக. அவரின் வழியில் வந்த கட்சிகள் கொள்கைகளை பேசிக் கொண்டுள்ளனர்.
பெரியார் சமூக நீதிக்கான இந்திய அளவிலான அடையாள சின்னம். ஆனால் சமூக நீதிக்கான அநீதிகளை ஆளும் திமுக செய்து வருகிறது. தமிழகத்தில் சாதியை வைத்தே அடக்குமுறைகள் ஏற்பட்டது. இதை தெரிந்து கொள்ள கூட முதல்வருக்கு ஆர்வமில்லை. சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்பதற்காக 45 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது.
பீகாரில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பு நடத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு கூட அதிகாரம் உள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இது தொடர்பாக கணக்கு கேட்டால் அரசிடம் தரவுகள் இல்லை. 1987ம் ஆண்டு இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு பின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடை பெற்றோம்.
அவ்வாறு இட ஒதுக்கீடு பெற்ற 114 சமூகங்கள் என எடுத்துக் கொண்டால், 6.7 விழுக்காடு. வன்னியர் சமூகம் 14.1 விழுக்காடு ஆகும். இது தொடர்பாக அண்மையில் அரசு வெளியிட்டது பொய்
கணக்கு தான். கலைஞர் இருந்திருந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து இருப்பார். தியாகிகள் தினமான இன்று நாங்கள் மீண்டும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துங்கள் என்று முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம்.
அரசில் உள்ள 53 துறைகளில் ஒரு செயலாளர் கூட வன்னியர் கிடையாது. எதிலும் வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. 23 வன்னியர்கள். 21 பட்டியல் இன எம்எல்ஏக்கள் இருந்தாலும் இரு சமூகத்திலும் தலா 3 அமைச்சர்கள் உள்ளனர். மற்ற சமூக எம்எல்ஏக்களில் ஒவ்வொரு சமூகத்திலும் எத்தனை அமைச்சர்கள் உள்ளனர் என்பதை எண்ணி பார்க்கவேண்டும். அடையாள அரசியல் செய்ய வேண்டும். இன்று பெரியார் பிறந்தநாளில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் அறிவிக்க வேண்டும். இல்லை என்றாலும் பாமக சார்பில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.” என்றார்.












Click it and Unblock the Notifications