விழுப்புரத்தில் தாசில்தார் வீட்டில் காலை முதல் சல்லடை போட்டு வரும் லஞ்ச ஒழிப்புத்துறை! பின்னணி என்ன?
விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள தாசில்தார் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2015ஆம் ஆண்டில், தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் முறைகேடு மற்றும் கையாடல் நடைபெற்றுள்ளதாக கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் சென்றன.

விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய விபத்து இழப்பீடு, இயற்கை மரணம் உதவித் தொகை, திருமண உதவி தொகை, கல்வி உதவி தொகை போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக பொய் கணக்குகளை காண்பித்து அதன் மூலம் பல கோடி ரூபாய் கையாடல் செய்திருப்பதாக பல புகார்கள் வந்தன.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் ரகசியமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கையாடல் செய்திருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, அப்போதைய விழுப்புரம் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராக பணியாற்றிய சுந்தரராஜன் உள்ளிட்டோர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராக பணியாற்றி தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் சுரங்கம் மற்றும் கணிமவளத்துறை வட்டாட்சியராக பணியாற்றி வரும் சுந்தரராஜனுக்கு சொந்தமாக விழுப்புரம் தந்தை பெரியார் நகரில் உள்ள ஒரு வீடு, விழுப்புரத்தில் உள்ள மற்றொரு வீடு ஆகிய இரண்டு இடங்களில் கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தினர்.
மேளும், சுந்தரராஜனுக்கு உடந்தையாக இருந்த டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணியாற்றிய தேவிகா என்பவரது வீடு, இடைத்தரகர் முருகன் ஆகியோரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். விழுப்புரத்தில் 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூலை 14ஆம் தேதியான நேற்று தொடங்கியது. நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் விழுப்புரத்தைச் சேர்ந்த வட்டாட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications