சென்னை புறப்பட்ட ராமதாஸ்.. அன்புமணியுடன் நடக்கும் சந்திப்பு? பாமகவில் முடிவுக்கு வரும் மோதல்!
விழுப்புரம்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மற்றும் அதிமுக மூத்த தலைவர் சைதை துரைசாமி ஆகியோர் நண்பர்களால் என்பதால் சந்தித்து சென்றதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். குருமூர்த்தி தனது நீண்ட கால நண்பர் என்று கூறிய ராமதாஸ், அவர் மீது மதிப்பு உள்ளதாக தெரிவித்தார். இதனிடையே தைலாபுரத்தில் இருந்து ராமதாஸ் சென்னை புறப்பட்டுள்ளார். இதனால் அன்புமணியை சந்திக்க செல்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோருக்கு இடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே நேற்று முன் தினம் அன்புமணி சென்னையில் இருந்து புறப்பட்டு வந்து தைலாபுரத்தில் உள்ள ராமதாஸை சந்தித்தார். அதன்பின் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மற்றும் அதிமுக மூத்த தலைவர் சைதை துரைசாமி ஆகியோரும் ராமதாஸை சந்தித்தனர்.

ராமதாஸ் - குருமூர்த்தி சந்திப்பு
இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக இணைகிறதா என்ற கேள்வி எழுந்தது. சுமார் 3 மணி நேரம் ராமதாஸுடன் ஆலோசனை நடத்திய பின் குருமூர்த்தி புறப்பட்டு சென்றார். அப்போது ராமதாஸை சந்தித்தது நட்பு ரீதியிலான சந்திப்பு மட்டும்தான். இங்கு அன்புமணி வந்ததே தனக்கு தெரியாது என்றும் விளக்கம் கொடுத்து சென்றார்.
பாஜக கூட்டணியில் பாமக
ஆனால் நேற்று முன் தினம் இரவு சென்னையில் அன்புமணி - குருமூர்த்தி இடையிலான சந்திப்பு நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் அமித் ஷா வருகைக்கு முன்பாக அதிமுக - பாஜக கூட்டணியில் பாமகவை கொண்டு வர வேண்டும் என்று குருமூர்த்தி மூலம் தூதுவிடப்பட்டதாக சொல்லப்பட்டு வருகிறது.
நல்ல செய்தி
இதனிடையே நேற்று ராமதாஸை சந்தித்து பாமக நிர்வாகிகள் பலரும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ராமதாஸ் தரப்பில், விரைவில் நல்ல செய்தி வரும்.. ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள மகளிரணி மாநாட்டு பணிகளை மேற்கொள்ளுங்கள் என்று கூறியதாக பாமக அரசியல் குழு தலைவர் தீரன் தெரிவித்திருந்தார். இதனால் ராமதாஸ் - அன்புமணி இடையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
சென்னை புறப்பட்ட ராமதாஸ்
இந்த நிலையில் இன்று தைலாபுரம் தோட்டத்தில் இருந்து ராமதாஸ் சென்னை புறப்பட்டுள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசுகையில், சென்னைக்கு செல்கிறேன்.. மகள்கள்.. பேரன்கள், கொள்ளு பேரன்களை பார்ப்பதற்காக செல்கிறேன்.. செவ்வாய்க் கிழமையன்று மீண்டும் செய்தியாளர்களை சந்திப்பேன். உடல்நலப் பரிசோதனைக்காக செல்லவில்லை.
அன்புமணியுடன் சந்திப்பு?
துக்ளக் குருமூர்த்தி பேசினார்.. அவரை மிகவும் மதிக்கிறேன்.. எங்களுக்கு இடையில் நீண்ட கால நட்பு உள்ளது. அதேபோல சைதை துரைசாமியும்.. அன்புமணியும் தைலாபுரம் வந்து பேசினார். இதுதொடர்பாக மீண்டும் வரும் போது பதில் சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார். சென்னை செல்லும் ராமதாஸ், அன்புமணியை சந்தித்து பேசுவாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications