விஜய் வரும் நேரம்.. திடீரென மேடை ஏறிய தொண்டர்! பவுன்சர் செய்த காரியம்.. பதறிய நிர்வாகிகள்.. பரபரப்பு
விழுப்புரம்: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இப்போது விழுப்புரத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே மாநாட்டில் விஜய் நடந்து சென்ற ரேம்பில் திடீரென ஒருவர் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரை அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த பவுன்சர் கவனித்து அலேக்காக தூக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். அவரது கட்சியின் கொடி மற்றும் பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

மாநில மாநாடு: இந்தச் சூழலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டி வி சாலையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க நேற்று இரவு முதலே விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் விரைந்தனர். இன்று மதியமே பார்க்கிங் பெரும்பாலும் நிரம்பிவிட்டன. மாநாடு நடக்கும் இடத்தின் இரண்டு பக்கமும் பல கிமீ தூரத்திற்கு டிராபிக் நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
இருந்த போதிலும் தொண்டர்கள் வாகனங்களை முன்பே நிறுத்திவிட்டுப் பல கிமீ நடந்தே மாநாடு நடக்கும் இடத்திற்கு வந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மாலை 3 மணியளவில் மாநாடு தொடங்கியது. மாலை 4 மணிக்கு விஜய் மாநாடு நடக்கும் மேடைக்கு வந்த நிலையில், கட்சிக் கொடியையும் ஏற்றினார். விஜய் நடக்க இருந்த ரேம்பில் திடீரென ஒருவர் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பரபரப்பு: அப்போது மாநாட்டிற்கு விஜய் வர சில நொடிகள் மட்டுமே இருந்தது. அப்போது திடீரென விஜய் நடந்து செல்லும் ரேம்பில் நிர்வாகி ஒருவர் ஏறியதாகத் தெரிகிறது. உடனடியாக அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த பவுன்சர் அதைக் கவனித்தார்.
அலேக்காக தூக்கிய பவுன்சர்: உடனே அங்கு ஓடி சென்ற பவுன்சர் அவரை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார். இருப்பினும், அவர் கீழே இறங்க மறுத்து வாக்குவாதம் செய்தார். தான் கட்சியின் நிர்வாகி என்று சொல்லி ஐடி கார்டு எல்லாம் காட்டி பேசினார். இருந்தாலும் அந்த பவுன்சர் அதை எல்லாம் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் அந்த நிர்வாகியை அப்படியே அலேக்காக தூக்கினார்.
இருப்பினும், அருகே இருந்த கம்பியை பிடித்துக் கொண்டு அந்த நபர் இறங்கவே மாட்டேன் என்று அடம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பவுன்சர் உடன் அந்த நிர்வாகி தொடர்ந்து வாக்குவாதம் செய்தார். மேடையில் யாரையோ அழைத்தார். உடனடியாக அங்குச் சிலர் ஓடி வந்தனர். அவர்கள் வந்து பவுன்சரிடம் ஏதோ சொல்லவே.. அதன் பிறகே அவரை உள்ளே அனுமதித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications