வீரனாக வெற்றி பெற்ற மகன்.. ஆனந்தக் கண்ணீரில் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீர முத்துவேல் அப்பா
விழுப்புரம்: "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல்" என்று வள்ளுவர் சொன்னதைப்போல தன் வீட்டிற்கு மட்டுமல்லாது நாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கிறார் சந்திரயான் 3 திட்ட இயக்குநர் இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல். அதனை தொலைக்காட்சியில் பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறார் அவரது தந்தை.
இன்றைய நாள் இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் மறக்க முடியாத நாள். எனது மகன் வீரமுத்துவேல், சந்திரயான் 3 திட்டத்திற்கான பணியை ஏற்றுக்கொண்டதில் இருந்து பல மாதங்களாக உழைத்து அவரது பெயருக்கு ஏற்றார் போல வீரனாக வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்தியா ஒரு வீர நாடு என்ற பெயரை நிலை நிறுத்தியுள்ளார் வீரமுத்துவேல். இந்த வெற்றியைப் பார்த்து நாங்கள் சந்தோஷப்படுவதை விட என்னுடைய மகன் சந்தோஷப்படுவதை விட நாட்டு மக்களே மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்திருக்கிறார் வீரமுத்துவேல்.
நிலவு ஆய்வு பயணத்தில் நமக்கு போட்டியாக திகழ்ந்த ரஷ்யா தோல்வியடைந்தது. நமது நாடு வெற்றியடைந்து விட்டது. இதன் மூலம் ரஷ்யாவை விட நம்முடைய நாடு வல்லரசாக திகழ்கிறது. எல்லா நாடுகளும் வாழ்த்துகின்றன. நம்முடைய நாட்டின் பாரத பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இருக்கிறார்.
ஒரு தந்தையாக இதை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் பல தியாகங்களை செய்திருக்கிறார் எனது மகன். சந்திரயான் திட்டம்தான் முக்கியம் என்று எங்களுக்கு தெரியும் எங்களுடன் பேசுவதற்குக் கூட அவருக்கு நேரமில்லை. எனது மகளின் திருமணம் 20ஆம் தேதி நடைபெற்றது. 23ஆம் தேதி லேண்டர் தரையிறங்கும் நாள். எனவே வீரமுத்துவேல் எங்கள் வீட்டில் நடைபெற்ற திருமணத்திற்கு வர முடியாமல் போனது. அதுதான் முக்கியம் என்று எங்களுக்கு தெரியும். இப்போது இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. இதற்கெல்லாம் இறையருள்தான் காரணம் என்றும் கூறியுள்ளார் விஞ்ஞானி வீர முத்துவேலின் தந்தை.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு எனது மகனை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். 5 நிமிடம் மட்டுமே பேசினேன். அதன் பிறகு நான் பேசவேயில்லை. எனது மகனைப்பற்றிதான் எல்லோரும் பேசுவார்கள். எனது மகன் சந்திரயான் திட்டத்தில் பங்கேற்றதில் இருந்தே ஆயிரக்கணக்கானோர் பெருமையாக பேசி பாராட்டியிருக்கிறார்கள் என்றும் மகிழ்ச்சியும் பெருமிதமும் பொங்க கூறியிருக்கிறார் வீர முத்துவேலின் தந்தை.












Click it and Unblock the Notifications