மீண்டும் சிக்சர்..மகளிர் உரிமை தொகை..மு.க.ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! இத்தனை பேருக்கு கிடைக்கப் போகுதா?
விழுப்புரம்: தமிழகத்தில் ஏற்கனவே 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் நிலையில், மேலும் பலருக்கு உரிமைத் தொகை வழங்கப்படவுள்ளதாக விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து வெளியிட்டுள்ள வீடியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடந்த 2021 தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை தான் ஆட்சியை பிடிப்பதற்கு ஒரு காரணமாக இருந்தது என கூறலாம். அப்போது அது தான் தமிழகம் முழுவதும் பேசு பொருளாக இருந்தது.

பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதில் குறிப்பிட தகுந்த திட்டம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதுதான். அதனையே பின்பற்றி அதிமுக அறிவித்தாலும் திமுகவுக்கே மக்கள் ஆதரவு இருந்தது.
எதிர்பார்த்தது போல திமுக பெருவெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால் ஆயிரம் ரூபாய் திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 2 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மகளிருக்கு உரிமை தொகை திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது. இதனையே எதிர்க் கட்சிகளும் விமர்சனம் செய்யத் தொடங்கின. இதனிடையே பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே மகளிர் உரிமை தொகை திட்டம் தமிழகத்தில் அமலாக்கப்பட்டது. சில நிபந்தனைகளுக்குட்பட்டு மகளிர் உரிமை தொகை திட்டம் செயலுக்கு வந்தது.
அரசு ஊழியராக இருக்கக் கூடாது, வருமான வரி செலுத்துபவர்களுக்கு உரிமைத் தொகை கிடையாது போன்ற நிபந்தனைகளுடன் சுமார் ஒரு கோடி பேர் பயனாளிகளாக அறிவிக்கப்பட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து தகுதி இருந்தும் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என பலர் முறையிட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது.
பயனாளிகள்: தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்ட நிலையில் தற்போது சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பேர் மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் ஏறக்குறைய இரண்டரை கோடி குடும்ப அட்டைகள் இருக்கும் நிலையில் பாதி பேருக்கு மட்டுமே உரிமைத்தொகை வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இந்த நிலையில் சில வாரங்களுக்கு மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் புதிதாக மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
புதிய விண்ணப்பங்கள்: இதற்கிடையே மக்களவை தேர்தல் நிறைவடைந்தவுடன் ஏற்கனவே விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் என கூடுதலாக பயனாளிகள் இணைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே 1 கோடியே 16 லட்சம் மகளிர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெறும் நிலையில், இந்த மாதத்தில் இருந்து புதிதாக 1 லட்சத்து 48 ஆயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை தரப் போகிறோம் என கூறியுள்ளார் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதல்வர். 2023 ஜனவரி மாதத்தில் இருந்து மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்தவர்களின் தகுதி சரிபார்ப்பு உள்ளிட்ட நடைமுறைகள் இருந்த நிலையில் புதிதாக திருமணம் செய்தோர் மற்றும் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தோர் என சுமார் 2 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டதால் தற்போது தமிழகத்தில் ஏற்கனவே குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், ஜூன் மாதத்திற்கு பிறகு புதிய குடும்ப அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்கள் ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை இந்த மாதம் முதல் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications