ரயிலில் ஏறும்போது விழுந்து சிக்கிக்கொண்ட 4 பேர்.. உடனே சங்கிலியை இழுத்த பயணிகள்.. பரபர திண்டிவனம்!
விழுப்புரம்: திண்டிவனம் ரயில் நிலையத்தில் கைக்குழந்தையுடன் ரயிலில் ஏற முயன்றபோது கால் இடறி தண்டவாளத்தில் விழுந்த 4 பேர், ரயில் பெட்டிக்கு அடியில் சிக்கிக் கொண்ட சம்பவத்தால் திண்டிவனம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற பயணிகள் அபாய சங்கிலியை இழுத்ததால் ரயில் நின்றது. இதன் மூலம் அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் திருச்செந்தூர் செல்வதற்காக, திண்டிவனம் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளனர். திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர்கள் ரயிலில் ஏற முயன்றபோது, திடீரென ரயிலை இயக்கியதாக கூறப்படுகிறது. இதில், கைக்குழந்தை உட்பட 3 பேர் ரயிலுக்கு அடியில் விழுந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரயில் நிலையத்தில் 7 மாத கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ரயில் ஏற முயன்றுள்ளனர். அப்போது கால் இடறி, தண்டவாளத்தின் இடையே சிக்கிக் கொண்டனர். முன் அறிவிப்பின்றி திடீரென ரயிலை எடுத்ததால் அதில் ஏற முயன்றபோது, குழந்தையுடன் 4 பேர் தண்டவாளத்தில் தவறி விழுந்து பெட்டிகளுக்கு கீழ் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதைப்பார்த்த மற்ற பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி, ஏழு மாத குழந்தை உள்ளிட்ட 4 பேரையும் மீட்டுள்ளனர். சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட அவர்களை ரயில்வே போலீசார், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
முன்னறிவிப்பு இன்றி ரயிலை இயக்கத் தொடங்கியதாக ஆத்திரமடைந்த பயணிகள், ரயிலை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், திண்டிவனம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே போலீசார் தலையிட்டு, பயணிகளை அப்புறப்படுத்தினர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் 15 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.












Click it and Unblock the Notifications