பிரதமரை பாராட்டுறார்.. திமுக, அதிமுகவை விமர்சிக்கிறார்.. அன்புமணி தலைவர் ஆனதும் பாமக முகம் மாறுதா?
விழுப்புரம் : மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் குறைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சிக்கு வந்த கட்சிகள் மதுவை பெருக்கி சீரழித்து விட்டன எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

தலைவரான அன்புமணி
கடந்த மே 28ஆம் தேதி பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நடந்தது. இந்த சிறப்பு பொதுக்குழுவில் பா.ம.க.வின் புதிய தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பாமக தலைவராக இருந்த ஜி.கே.மணி கௌரவ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணிக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மோடி ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளது
பா.ம.கவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் ஊழல் குறைந்துள்ளது. அரசு நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

மொழியை திணிக்கக் கூடாது
இந்தியாவின் ஒரே மொழி இந்தி என்கிறார்கள். இந்தியாவை பொருத்தவரை எந்த ஒரு மொழியும் தேசிய மொழியும் அல்ல, மாநில மொழியும் அல்ல. மொழிகளில் அலுவல் மொழி, இணைப்பு மொழி என இரு வகைப்படும். நாட்டில் அலுவல் மொழிகளாக 22 மொழிகள் உள்ளன. ஆங்கிலம் இணைப்பு மொழியாகும். எனவே எந்த ஒரு மொழியையும் திணிக்க முடியாது. அப்படிப் பார்த்தால் தமிழ் மொழி தொன்மை வாய்ந்த மொழியாகும். எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம், ஆனால் திணிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

மது ஒழிப்பு
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் மது அருந்துதல், போதைப் பொருள்களை பயன்படுத்துதல் போன்ற கலாசாரம் கடந்த 10 ஆண்டுகளாகவே அதிகரித்துள்ளது. மதுவுக்கு எதிராக 40 ஆண்டுகளாக பாமக நிறுவனர் ராமதாஸ் போராட்டம் நடத்தி வருகிறார். திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சிக்கு வந்த கட்சிகள்தான் மதுவை பெருக்கி சீரழித்து விட்டன. அடுத்த தலைமுறையை கெடுக்கும் மதுவை ஒழிப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிந்தித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிப்படி, அடுத்த 4 ஆண்டுகளுக்குள் மதுவை ஒழிப்பதற்கான செயல் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காப்பி அடித்து விட்டார்கள்
மேலும், 2016ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு 'மாற்றம், முன்னேற்றம், அன்புமணி' என நவீன பிரச்சாரத்தை தொடங்கி தேர்தல் வரைவு அறிக்கையை முன்கூட்டியே வெளியிட்டோம். அதை தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் காப்பி அடித்துவிட்டன. எனவே, இப்போது 'பாமக 2.0' திட்டம் என்ன என்பதை முன்கூட்டியே சொல்ல மாட்டோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மோடிக்கு பாராட்டு
புதிதாக தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ், தமிழகத்தை மாற்றி மாற்றி ஆண்டு வரும் கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.கவை விமர்சித்துள்ள நிலையில், மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் ஊழல் குறைந்துள்ளதாக கூறியிருக்கிறார். அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் இருந்தாலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாமக, திமுகவை விமர்சிப்பதில் மென்போக்கையே கையாண்டு வருகிறது. இந்நிலையில், மோடி ஆட்சியை பாமக தலைவராகப் பொறுப்பேற்ற அன்புமணி பாராட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications