'ஸ்டாலின் அரசை நம்பி நானில்லை'.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.. சிவி சண்முகம் காட்டம்
விழுப்புரம்: எனக்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பை விலக்கிக்கொண்டதன் காரணம் என்ன என்று கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தேன். சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்ற வக்கில்லாத இந்த ஸ்டாலின் அரசை நம்பி, எதிர்பார்த்து நான் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்பியுமான சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
முன்னாள் தமிழக அமைச்சரும், ராஜ்யசபா எம்பியுமான சி.வி.சண்முகத்திற்கு கடந்த 2021-ம் ஆண்டு தொலைபேசியில் கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில் "சசிகலாவின் தூண்டுதலின்பேரில் அவரின் ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் எனக்குத் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர் அவர்கள் என்னையும், என் குடும்பத்தினரையும் கொலைசெய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதன் பேரில் போலீசார் வழக்கும் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் இந்த புகாரில் முகாந்திரம் ஏதும் இல்லையென்று கூறியும், சிவி சண்முகம் கொடுத்த புகார்கள் அனைத்தையும் "மிஸ்டேக் ஆஃப் ஃபேக்ட்" என்று கூறி முதல் தகவல் அறிக்கையை ரத்துசெய்யும்படி போலீஸ் அறிக்கை தாக்கல் செய்ததாகவும் சொல்லப்படுகிறது . இதை எதிர்த்து திண்டிவனம் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் மனுத்தாக்கல் செய்தார். நேற்றைய தினம், அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், சி.வி.சண்முகம் நேரில் ஆஜராகினார்.
அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சிவி சண்முகம் கூறுகையில், "எனக்கு கொடுக்கப்பட்டுவந்த பாதுகாப்பை விலக்கிக்கொண்டதன் காரணம் என்ன என்று கேட்டு நான் கேஸ் போட்டிருக்கிறேன். சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்ற வக்கில்லாத இந்த ஸ்டாலின் அரசை நம்பி, எதிர்பார்த்து நான் இல்லை.

'எனக்கு மீண்டும் பாதுகாப்பு கொடுங்கன்னு' இப்போது உள்ள அரசிடம் நான் எதிர்பார்க்கவில்லை, எனக்கு தேவையும் இல்லை. பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று நான் வழக்கு தொடரவே இல்லை. 'எனக்கு அச்சுறுத்தல் இல்லை' என்பதை மு.க.ஸ்டாலின் அரசினுடைய டி.ஜி.பி மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோர் ஐகோர்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யச் சொல்லுங்கள். நான் என்னுடைய வழக்கைத் திரும்ப பெற்றுக்கொள்கிறேன் என்பதுதான் என்னுடைய வழக்கு.
அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உயர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் தமிழக காவல்துறைத் தலைவரை பதிலளிக்கும்படி உத்தரவிட்டார். அந்த உத்தரவைப் பெற்றவுடனே நான் கொடுத்திருக்கும் புகார்கள் அனைத்தையும் "மிஸ்டேக் ஆஃப் ஃபேக்ட்" என்று சொல்லி வேக வேகமாக முடிக்கிறார்கள். இதுவரை நான் கிட்டத்தட்ட 15 புகார்கள் கொடுத்திருக்கிறேன். அதில் ஒரு புகாரில்கூட என்னை நேரடியாக விசாரித்ததில்லை. இந்த வழக்கை விசாரிக்காமலேயே முடித்து வைத்திருக்கிறார்கள். என்னிடம் விசாரிக்கவில்லை, என் போனையும் வாங்கிப் பார்க்கவில்லை என்று வேதனை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications