மகளிர் உரிமை தொகையுடன் தமிழக அரசு வழங்கிய கோடைகால சிறப்பு நிதி.. சிவி சண்முகம் சர்ச்சைக்குரிய பேச்சு
விழுப்புரம்: கோடை வெயிலால் மக்கள் கருத்து விட்டார்கள். எனவே இரண்டாயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு நீங்கள் (பெண்கள்), கணவர், பிள்ளைகள், மாமனார், மாமியார், சக்காளத்தி, ஒரவத்தி, வீட்டுக்காரருக்கு தனியாக குடும்பம் இருந்தால் அதையும் அழைத்துக்கொண்டு இரண்டாயிரம் ரூபாயில் கொடைக்கானல், ஊட்டிக்கு சென்று பத்து நாட்கள் தங்கி குளு, குளுவென இருக்க முடியுமா.. இரண்டாயிரத்தை வைத்துக்கொண்டு விழுப்புரம் போயிட்டு வர முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாளை முன்னிட்டு, விழுப்புரம் நகரில் அதிமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. தமிழக முன்னாள் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நகரின் பல பகுதிகளில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பெண்கள், முதியவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதேபோல் விழுப்புரம் அடுத்த வி.அரியலூர் கிராமத்தில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.
நிகழ்வில் உரையாற்றிய சி.வி. சண்முகம், "ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ஆண்டுதோறும் எங்கள் சக்திக்கு இயன்ற அளவில் மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களோடு இருந்து பணியாற்றும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே. தற்போது மாநிலத்தில் முக்கியமான அரசியல் காலகட்டம் இருக்கிறது.
இறுதி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா? என்று பொதுமக்கள் அனைவரும் சரி பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து முடிவு செய்ய வேண்டும். பெண்கள் பாதுகாப்பு, சட்டம்- ஒழுங்கு, விலைவாசி கட்டுப்பாடு ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும். அந்த வகையில் மீண்டும் நல்லாட்சியை கொண்டு வர வேண்டும் என்றால் 'இரட்டை இலை' சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
தற்போதையை ஆட்சியில் மக்கள் பொருளாதார சுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பெரிய தொழிற்சாலைகள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால், வங்கிகள் பேசி வட்டி, அபராத வட்டியில் தள்ளுபடி வழங்குகின்றன. தற்போது கோடை வெயிலால் மக்கள் கருத்து விட்டார்கள். எனவே திமுக அரசு கொடுத்த இரண்டாயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு நீங்கள் (பெண்கள்), கணவர், பிள்ளைகள், மாமனார், மாமியார், சக்காளத்தி, ஒரவத்தி, வீட்டுக்காரருக்கு தனியாக குடும்பம் இருந்தால் அதையும் அழைத்துக்கொண்டு இரண்டாயிரம் ரூபாயில் கொடைக்கானல், ஊட்டிக்கு சென்று பத்து நாட்கள் தங்கி குளு, குளுவென இருக்க முடியுமா.. இரண்டாயிரத்தை வைத்துக்கொண்டு விழுப்புரம் போயிட்டு வர முடியாது.
இந்த ஆட்சி டாஸ்மாக் ஆட்சி. ஐந்தாயிரம் கொடுத்த அன்றைக்கு டாஸ்மாக் விற்பனை ஆயிரம் கோடியை தாண்டி விட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்வி கடனை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு கடனை அடைக்கும். மத்திய அரசு இன்னைக்கு யார்? பிரதமர் மோடி. மோடி எங்கு உள்ளார். எங்களுடன் உள்ளார். நாங்கள் சொன்னால் மோடி செய்வார். கல்வி கடனுக்கான வட்டியையும், அபராதத்தையும் தள்ளுபடி செய்ய மோடியிடம் கூறுவோம், ஏனென்றால் எங்களிடம் மோடி இருக்கிறார். முடிந்தால் அசலிலும் தள்ளுபடி செய்வார்கள். நீங்கள் இங்கு வாக்களித்து ஒருவரை தேர்ந்தெடுக்கிறீர்கள், அவர் முதலமைச்சராகிறார். இந்த ஐந்து ஆண்டுகளில் உங்கள் மாவட்டத்திற்கு என்ன கிடைத்தது? என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும்" என்று சிவி சண்முகம் பேசினார்.












Click it and Unblock the Notifications