"தலித்தை முதலமைச்சராக்குவோம்.. பட்டியலினத்தவர்கள் ஆதரித்தால் எங்கள் ஆட்சிதான்"- பாமக தலைவர் அன்புமணி
விழுப்புரம்: தமிழ்நாட்டில் பாமக தலைமையிலான ஆட்சி அமையும் போது நிச்சயம் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையே முதல்வராக்குவோம் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், எந்தவொரு கட்சியையும் விட பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாமக தான் அதிக நன்மை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடு முழுக்க இன்று 78ஆவது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றது.

அதன்படி திண்டிவனம் அருகேயுள்ள கீழ்சிவிரி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
அன்புமணி ராமதாஸ்: செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "தமிழ்நாட்டில் இருக்கும் ஒட்டுமொத்த பட்டியலினத்தவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் எங்களை ஆதரித்தால் நிச்சயம் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்குவோம். இது சும்மா பேச்சுக்குச் சொல்வது இல்லை. எங்களுக்கு முதல்முறையாக மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்த போது, பட்டினத்தைச் சேர்ந்த தலித் எழில்மலைக்கு தான் மத்திய அமைச்சர் பதவியைக் கொடுத்தோம். நாங்கள் சும்மா பேச்சுக்கு மட்டும் சொல்ல மாட்டோம். சொன்னதைச் செய்வோம்.
திமுக 199இல் தான் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை மத்திய அமைச்சராக்கியது. அப்போது ஆ. ராசாவை ஆக்கினார்கள். ஆனால் பாமக 1998ம் ஆண்டிலேயே தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை மத்திய அமைச்சராக்கிவிட்டோம்.
முதல் மத்திய அமைச்சர்: இங்கே பட்டியலினத்தவருக்கு அதிகம் செய்தது ராமதாஸும் பாமகவும் தான். வேறு யாரும் கிட்ட கூட வர முடியாது. நான் மத்திய அமைச்சராக இருந்த போது 22 ஆண்டுகளாக மத்தியில் உள்ள மருத்துவ படிப்புகளில் பட்டியலினத்தவருக்கு இட ஒதுக்கீடு இல்லை. எனக்கு முன்பு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரே அமைச்சராக இருந்தார். ஆனால், அவரால் கூட அதைக் கொண்டு வர முடியவில்லை. ஆனால், நான் அமைச்சராக இருந்த போது தான் முதல்முறையாக அகில இந்திய மருத்துவ கோட்டாவில் இட ஒதுக்கீடு கொண்டு வந்தோம்.
தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ மையம் இருக்கிறது. அதற்குப் பண்டிதர் அயோத்திதாசர் பெயரை வைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. அதை நிறைவேற்றியது இந்த அன்புமணி ராமதாஸ் தான். பண்டிதர் அயோத்திதாசர் என்பவர் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர். அவருக்கான சிலையும் அங்கே திறக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் ராமதாஸ்: குடிதாங்கி என்ற ஊரில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரது சடலத்தைச் சுமந்து சென்று அடக்கம் செய்தவர் மருத்துவர் ராமதாஸ். இதை எல்லாம் விளம்பரத்திற்காக நாங்கள் செய்வதில்லை. நான் மத்திய அமைச்சராக இருந்த போதுதான் நாடு முழுக்க இருக்கும் மருத்துவ கல்வி நிறுவனங்களில் பட்டியலின மாணவர்களுக்கு எதாவது பாகுபாடு இருந்தால் அதைச் சரி செய்ய கமிட்டியை அமைத்தோம். பிரச்சினைகளைக் கண்டறிந்து சரி செய்தோம்.
ஒரே நாளில் ஏழு அம்பேத்கர் சிலையைத் திறந்ததும் மருத்துவர் ராமதாஸ் தான். அருந்ததியினர் உள் ஒதுக்கீட்டிற்கு முதலில் குரல் கொடுத்து, போராட்டம் நடத்தி, மாநாடு போட்டவர் மருத்துவர் ராமதாஸ் தான். அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் இதை வலியுறுத்திப் பெற்றுத் தந்தவரும் மருத்துவர் ராமதாஸ் தான். இதுபோல தாழ்த்தப்பட்ட பட்டியலின சமூகத்தினருக்குப் பல திட்டங்களை பாமக செய்துள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications