'மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.. ஜெயலலிதா பல்கலைக்கழகம் பிரம்மாண்டமாக அமையும்..' சிவி சண்முகம் பஞ்ச்
விழுப்புரம்: ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முடக்கி மக்கள் விரோத அரசாகச் செயல்படுவதாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் ஒன்று தொடங்கப்பட்டது. அதற்குத் துணைவேந்தரும் நியமிக்கப்பட்டார்.
இருப்பினும், ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கான நிதி ஒதுக்கீடு, கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் நடைபெறவில்லை. இதனால் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க முடிவு செய்ததுள்ளதாக தற்போதைய திமுக அரசு அறிவித்தது.

பல்கலைக்கழகம் இணைப்பு
அதன்படி ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு இணைப்பதற்கான மசோதா, இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்தச் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்,

பொய் சொல்லும் திமுக
விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தர்ணாவில் ஈடுபட்டு கைதானார். பின்னர், மாலை அவர் விடுவிக்கப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சி.வி சண்முகம், "விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அறிவிக்கப்பட்டதே தவிர, மேற்கொண்டு அதற்கான எந்த முயற எடுக்கவில்லை என்று ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகி விடும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நினைக்கின்றார்.

24 மணி நேரத்தில் துணை வேந்தர் நியமனம்
விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அரசு அறிவித்தவுடன், அடுத்த 24 மணி நேரத்தில் ஆளுநர் ஒப்புதல் பெற்று, துணைவேந்தர் நியமிக்கப்பட்டார் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடைமுறைகள் செயல்பாட்டுக்கு வந்தது. இதனால் தான் பல்கலைக்கழக விஷயத்தில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

10 நாட்கள் நீட்டித்திருந்தால்
ஆனால், அதிமுக அரசு இன்னும் ஒரு பத்து நாட்கள் நீடித்திருந்தால், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி இருப்போம். இருப்பினும், விழுப்புரத்தில் ஆவின் நிலையம் அருகே 10 ஏக்கர் நிலத்தையும், செங்காடு கிராமத்தில் 70 ஏக்கர் இடத்தையும் ஜெயலலிதா பல்கலைக்கழகம் நிறுவுவதற்காக, நாங்கள் தேர்வு செய்து வைத்திருந்தோம். இதனை முழுமையாகச் செயல்படுத்தும் வரை ஆட்சி நீடிக்கவில்லை.

முடக்கக் கூடாது
திருவெண்ணெய்நல்லூரில் அரசு கலைக் கல்லூரி திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த கல்லூரியை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் செயல்படுத்தியது. அதுபோல, ஒரு அரசினுடைய திட்டத்தைப் புதிதாக வருகின்ற அரசு முடக்கக்கூடாது. அதனை, தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். மேலும், அதிமுக ஆட்சியில் விழுப்புரம் நகரத்தில் 5 ஏக்கர் பரப்பளவில், ரூ. 50 கோடி மதிப்பீட்டில் டைட்டில் பார்க் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திமுக அரசு மக்கள் விரோத அரசு
அதுவும், இன்றைக்கு விழுப்புரம் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில், புதுச்சேரி எல்லையை ஒட்டி அமைப்பதற்கு, அரசு முன்வந்துள்ளது. இதனால் புதுச்சேரி மாநில இளைஞர்களுக்குப் பயனாக இருக்குமே தவிர, விழுப்புரம் மாவட்ட இளைஞர்களுக்குப் பயனாக இருக்காது. திமுக அரசு மக்கள் விரோத அரசாகச் செயல்படுகிறது. மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறி வருகிறது.

அதிமுக ஆட்சியில் மீண்டும் ஜெயலலிதா பல்கலைக்கழகம்
எனவே, இந்த ஆட்சி இன்னும் எத்தனை நாள் நீடிக்கும் எனத் தெரியவில்லை. ஐந்து ஆண்டுகள் முடிந்ததும் தேர்தல் வரும், அப்போது அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். அப்போது விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தைத் திட்டமிட்டபடி மிகச் சிறப்பாக நடத்த நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்று திமுகவிற்குச் சவால் விடும் வகையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மிகவும் ஆவேசமாகப் பேசினார்.












Click it and Unblock the Notifications