ராமதாஸ் Vs அன்புமணி.. இனி ஆட்டமே வேற.. குட் நியூஸ் சொன்ன ஜிகே மணி
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விரைவில் சந்திக்கவுள்ளதாகவும், 3 நாட்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் கெளரவ தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார்.
பாமகவில் உள்கட்சி பிரச்னை சமீபகாலமாக பூதாகரமாகி வருகிறது. தந்தைக்கும், மகனுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு பொது வெளியிலேயே அம்பலமாகிவிட்டது. ராமதாஸின் மகளின் மகன் முகுந்தன் மாநில இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டதில் தொடங்கிய இந்த மோதல் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

ஒரு கட்டத்தில் ராமதாஸ், இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதுதான் முடிவு இனி பாமகாவின் தலைவராகவும் நானே செயல்படுவேன் என்று அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்த அன்புமணி, "பாமக நிர்வாகிகளால் முறைப்படி தேர்வு செய்யப்பட்ட நான் தான் கட்சியின் தலைவர் என்று கூறினார்.
இதற்கிடையே, தைலாபுரம் தோட்டத்தில் பாமகவின் பல்வேறு அணி நிர்வாகிகளின் கூட்டத்தை ராமதாஸ் கடந்த 3 நாள்களாக கூட்டினார். இந்த கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், மகளிரணி, இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் நிர்வாகிகள் பெரிய அளவில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், கடந்த 2 நாள்களுக்கு முன்பு நடைபெற்ற வன்னியர் சங்க வடக்கு மண்டல மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நிர்வாகிகள் பெருமளவில் கலந்துகொண்டதால் ராமதாஸ் உற்சாகம் அடைந்துள்ளார்.
இந்த கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் அன்புமணி புறக்கணித்து வந்தார். கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், நிர்வாகிகள் பலரும் ராமதாஸுக்கே ஆதரவாக நிற்கின்றனர். இதைத்தொடர்ந்து, இன்று பாமக சமூக நீதிப் பேரவையின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, பாமக நிறுவனர் ராமதாஸ் சமூக நீதி பேரவை நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். 2026 சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும், என்ன பணிகளை ஆற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி பங்கேற்றார்.
தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விரைவில் சந்திக்கவுள்ளனர். கடந்த மூன்று நாட்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. ராமதாஸ், அன்புமணி இருவரும் ஒன்று கூடி செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்றார்.
மேலும், மாநில பொருளாளர் திலகபாமா, எம்.எல்.ஏ.க்கள் மயிலம் சிவக்குமார், மேட்டூர் சதாசிவம் ஆகியோர் தொடர்ந்து கூட்டத்தைப் புறக்கணித்து வரும் நிலையில், அவர்களும் எதிர்வரும் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications