பிளஸ் 2 தேர்வில் அரசு பள்ளியில் 251 பேர் 100க்கு 100 எப்படி.. விழுப்புரம் கல்வி அதிகாரி விளக்கம்
விழுப்புரம்: தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த மே 8-ந் தேதி வெளியானது. இதில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 167 மாணவர்கள் உள்பட மொத்தமாக ஒரே பகுதியில் 251 பேர் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதன்மூலம் பிளஸ்-2 பொதுத்தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்று விழுப்புரம் மாவட்ட கல்வி அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த மே 8-ந் தேதி வெளியானது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டாரத்தில் உள்ள செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் தேர்வு எழுதிய 167 மாணவ-மாணவிகள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 பேர், செஞ்சி தனியார் பள்ளி தேர்வு மையத்தில் 35 பேர், அனந்தபுரம் அரசு பள்ளியில் 11 பேர், அவலூர்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் 14 பேர், சத்தியமங்கலம் அரசு பள்ளியில் 7 பேர் என மொத்தம் 251 பேர் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பொதுவாக வேதியியல் பாடம் என்பது கடினமான பாடம். இந்த படத்தில் ஒரே தேர்வு மையத்தில் இவ்வளவு பேர் எப்படி 100க்கு 100 மதிப்பெண் எடுக்க முடியும் என்ற சர்ச்சை எழுந்தது.

ஏனெனில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய அனைவரும் 100க்கு 100 மதிப்பெண் எடுப்பது நடைமுறையில் சாத்தியமே இல்லை என்றும், செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் தேர்வு எழுதியவர்களில் 167 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பது எப்படி என்றும் ஆசிரியர்கள், மற்ற மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்,
மேற்கண்ட தேர்வு மையங்களில் மாணவர்கள் காப்பியடிக்க ஆசிரியர்கள் உதவி செய்தார்களா அல்லது முன்கூட்டியே வினாத்தாள் கசிந்து மாணவர்களுக்கு விடைகள் தயார் செய்து வழங்கப்பட்டதா என்று பள்ளி கல்வித்துறை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. மேலும் இந்த முறைகேடுக்கு காரணமானவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் இந்த சர்ச்சை எழுந்த உடனேயே விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு பெண்கள் பள்ளி தேர்வு மையத்தில் 3 பள்ளிகளை சேர்ந்த 414 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியிருந்தார்கள்.
இவர்களில் செஞ்சி அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் 65 பேர், தனியார் பள்ளியை சேர்ந்த 148 மாணவர்களில் 91 பேர், மற்றொரு தனியார் பள்ளியை சேர்ந்த 138 பேரில் 11 பேர் என மொத்தம் 167 பேர் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். மாதந்தோறும் பள்ளி அளவில் குறுந்தேர்வு நடத்தி ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்தார்கள். இதனால் கடந்த அரையாண்டு தேர்விலும் அம்மாணவர்கள் சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள்.
இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதுமே 3,181 மாணவ-மாணவிகள் வேதியியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வேதியியல் பாடத்தில் வினாக்கள் மிகவும் எளிதாக கேட்கப்பட்டிருந்தால் இப்படி மதிப்பெண் கிடைத்ததாக பெரும்பாலான மாணவ-மாணவிகள் கூறியிருந்தனர். செஞ்சி உள்பட அனைத்து தேர்வு மையங்களிலும் பறக்கும்படை குழுவினர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆகவே தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை, முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பே இல்லை" இவ்வாறு முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன் திட்டவட்டமாக கூறினார்.












Click it and Unblock the Notifications