பாமகவை உருவாக்கியதே நான்தான்.. என் கூட்டத்திற்கே சிலர் வருவதில்லை.. ராமதாஸ் ஆதங்கம்!
விழுப்புரம்: பாமகவில் இருந்து அன்புமணியை நீக்கப்போவதாக சிலர் வதந்தி பரப்பி வருவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். யார் வதந்திகளை கிளப்பிவிடுவது என்று தனக்கு தெரியும் என்று கூறிய ராமதாஸ், நான் உருவாக்கிய கட்சியில், நான் கூட்டிய கூட்டத்திற்கே சிலர் வரவில்லை என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் ராமதாஸ் இடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. சென்னைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருவதற்கு ஒரு நாள் முன்பாக, பாமகவின் தலைவர் பதவியை நானே எடுத்து கொள்கிறேன்.. இனி அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார் என்று ராமதாஸ் அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாட்டிலும் அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இடையில் மோதல் போக்கு தொடர்ந்தது. அதன்பின் ராமதாஸ் தரப்பில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தைலாபுரத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் சுமார் 20 நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் பலரும் பங்கேற்கவில்லை. இதனிடையே ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையிலான மோதல் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சமூகநீதி பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், ஒரு காலத்தில் வன்னியர் சமுதாயத்தில் யாரும் படிக்கவில்லை. பத்திரப்பதிவு செய்ய வேண்டுமென்றால், பெருவிரல் ரேகையை வைத்தனர். அப்படியான ஒரு சமுதாயத்தில் இருந்து நான் 5 ஆயிரம் வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும் உருவாக்கியுள்ளேன்.
அனைவரும் இடஒதுக்கீடு மூலமாக படித்து முன்னேறி இருக்கிறார்கள். அன்புமணிக்கும், எனக்கும் இடையில் எந்த கசப்பும் கிடையாது. அன்புமணி ராமதாஸ் விரைவில் நான் கூட்டும் கூட்டத்திற்கு வருவார். அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவேனா?.. அன்புமணி ராமதாஸை பாமகவில் இருந்து நீக்கப் போவதாக சிலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். வதந்திகளை பரப்புபவர்கள் யார் என்பது எனக்கு தெரியும்.
பாமகவை உருவாக்கியதே நான்தான். ஆனால் நான் கூட்டம் கூட்டத்திற்கே சிலர் வருவதில்லை என்று தெரிவித்துள்ளார். இன்றைய சமூகநீதிப் பேரவை கூட்டத்திலும் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கவில்லை. ஆனால் அக்கட்சியின் நிர்வாகிகள் ராமதாஸ் - அன்புமணி இடையில் சுமூகமான உறவு திரும்பிவிட்டதாக கூறி வருகின்றனர். இதனால் பாமக தொண்டர்கள் இடையில் மீண்டும் விவாதம் தொடங்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications