ரோடு போட்டு கொடு! கொடுப்பியா? சாமி ஆடிய பெண்! உறுதி கொடுத்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்! ஒரே பரபரப்பு!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், பெண் ஒருவர் திடீரென சாமி ஆடியது அங்கிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கும் பெண்கள் சாமி ஆடுவதற்கும் அப்படி என்ன தான் பந்தமோ தெரியவில்லை, இதுவரை இது போன்ற நிகழ்வு 3 இடங்களில் நடந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மகா மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத தீர்த்த திருக்குடம் விழாவில் பங்கேற்ற அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம், '' ஜெயிக்க வச்சதுக்கு என்னப்பா செஞ்ச, அமைச்சர் ஆனதிலிருந்து தொகுதிக்கு என்ன செஞ்சீங்க, நான் உன்னை ஜெயிக்க வச்சனா இல்லையா'' என பெருங்குரலில் சாமி ஆடிய படி ஒரு பெண் முழக்கமிட்டதை யாரும் மறக்க முடியாது.
அதேபோல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் நேற்று சாமி ஆடிய படி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இதனிடையே அப்போது அமைச்சர் பெரியகருப்பன் மேடைக்கு வராததால் இது பெரிதாகவில்லை.
இந்நிலையில் அடுத்ததொரு நிகழ்ச்சியாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நயம்பாடி ஊராட்சியில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்ட நிலையில், அங்கிருந்த பெண் ஒருவர் சாமி வந்துவிட்டதாக கூறி சாமி ஆடினார். இதனால் அங்கிருந்தவர்கள் மத்தியில் ஒரே பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே சாமி ஆடிய பெண்ணை கண்டு ஜெர்க் ஆகாமல் அவரை தனது அருகில் அழைத்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், என்னம்மா வேணும் எனக் கேட்டார். அதற்கு தங்கள் பகுதிக்கு ரோடு போட்டுக்கொடுக்கணும், கொடுப்பியா என உறுதிக்கேட்டார் அந்தப் பெண். இதையடுத்து சாலை அமைப்பதற்கான நிலத்தை உரியவர்கள் வழங்கினால் ரோடு போட்டுக் கொடுக்கலாம் என்ற உறுதியை வழங்கினார். மேலும், சாமி ஆடிய பெண்ணின் கையில் லட்டை கொடுத்து அமைதிப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications