கொரோனா ஊரடங்கு.. மக்களிடம் அத்துமீறும் "போலீஸ் நண்பர்கள் குழு".. விழுப்புரத்தில் தொடரும் அராஜகம்!
விழுப்புரம்: விழுப்புரத்தில் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் போலீஸ் நண்பர்கள் குழுவினர் அநாகரிகமாக நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதுதொடர்பான வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், 26 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 22 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட 50 பேரில் 37 பேர் விழுப்புரம் நகர பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களில் சிலருக்கு சமூக தொற்றாக இந்நோய் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விழுப்புரம் நகரில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே அதுவும் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மட்டும் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை பெற்றுச்செல்ல வசதியாக வண்ண அனுமதி அட்டை வழங்கப்பட்டது. ஆனாலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே வருவது குறைந்தபாடில்லை.
இந்நிலையில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே சுற்றி வருவதை தடுப்பதற்கும், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என கண்காணிப்பதற்காகவும், விழுப்புரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து, காவல்துறையோடு இணைந்து போலீஸ் நண்பர்கள் குழுவினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் போலீஸ் நண்பர்கள் குழுவினர் நாளுக்கு நாள் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில்,மூன்று பேர் மட்டுமே செல்லக்கூடிய ஆட்டோ ஒன்றில் 10 க்கும் போலீஸ் நண்பர்கள் குழுவினர் வருகின்றனர். அப்போது ஆட்டோவை வழிமறிக்கும் ஒருவர், போலீஸ் நண்பர்கள் குழுவினரே இப்படி சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஆட்டோவில் செல்லலாமா? சட்டம் எல்லாம் மக்களுக்கு மட்டும் தானா? உங்களுக்கு இல்லையா என கேள்வி எழுப்புகிறார். அதற்கு போலீஸ் நண்பர்கள் குழுவினர் ஆபாசன வார்த்தைகளால் அந்த நபரை கடுமையாக திட்டிவிட்டு அங்கிருந்து செல்கின்றனர்.
இதேபோல்விழுப்புரம் நகரில் பணியில் உள்ள போலீஸ் நண்பர்கள் குழுவினர் பொதுமக்கள் மற்றும் அத்தியாவசியப் பணிகளுக்கு செல்லும் அரசு ஊழியர்களிடம் நாள்தோறும் அநாகரிகமாக நடந்துகொள்வதாகவும், இதனை சம்பந்தப்பட்டவர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே விழுப்புரம் நகரம் முழுவதும் இன்று முதல் தனிமைப்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அண்ணாதுறை அறிவித்துள்ளார். மேலும் இன்று முதல் விழுப்புரம் நகரத்திற்கு வெளிநபர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறி வந்தால் அவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.