இன்று மழை குறுக்கிடுமா? விக்கிரவாண்டியில் விஜய் மாநாடு நடக்கும் இடத்தில் வானிலை என்ன? ஹேப்பியான தவெக
விழுப்புரம்: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு என்பது இன்று மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க மாநிலம் முழுவதுமிருந்து ஏராளமான தொண்டர்கள் காலை முதல் குவிந்து வரும் நிலையில் அங்கு இன்று வானிலை எப்படி இருக்கும்? மழை வருமா? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு என்பது இன்று நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் இன்று மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கி நடைபெற உள்ளது. மாலை 6 மணியளவில் நடிகர் விஜய் பேச உள்ளார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து 8 மாதங்கள் ஆகியும் இன்னும் கொள்கைகள் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இன்று நடக்கும் அரசியல் மாநாட்டில் நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கைகளை வெளியிட்டு பேச உள்ளார். இதனால் தமிழக அரசியலில் இந்த மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மாநாட்டுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகாவில் இருந்தும் நடிகர் விஜயின் ரசிகர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களாக விக்கிராவண்டி நோக்கி நேற்று இரவு முதல் படையெடுத்து வருகின்றனர். இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது.
இதனால் 200க்கும் அதிக ஏக்கரில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு மேடை, தொண்டர்கள் அமரும் இடம், கழிவறை வசதி, பார்க்கிங் வசதி, உணவு சாப்பிடும் இடம் என்று பிரத்யேகமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. விஜய் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், பிரபலங்களுக்கான மேடை மட்டுமே மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ளது. மற்றபடி தொண்டர்கள் அமர போடப்பட்டுள்ள இருக்கைகளின் மேற்புறம் எந்த பந்தல் வசதியும் செய்யப்படவில்லை.
இதனால் மழை வந்தால் தொண்டர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வார்கள். இந்நிலையில் தான் விக்கிரவாண்டியில் நடிகர் விஜயின் மாநாடு நடக்கும் இடத்தில் இன்று வானிலை நிலவரம் எப்படி உள்ளது? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் என்பவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‛‛டானா எனும் தீவிர புயலானது வடக்கு ஒடிசாவில் கரையை கடந்து விட்டது. ஆனாலம் அரபிக்கடலில் இருந்து ஈரப்பதமான மேற்கு காற்று தமிழகம் வருகிறது. இதனால் தென்மாவட்டங்களில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. ஆனால் இன்றைய தினம் தாழ்வு மண்டலம் என்பது தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து உள்ளது. இது விரைவில் இன்னும் வலுவிழக்கும்.
இதனால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று வானம் தெளிவாக இருக்கும். வெப்பமான சூழல் இருக்கும். அதிகாலை, இரவு நேரத்தில் பனிப்பொழிவுடன் குளிரான வானிலை இருக்கும். மழைக்கான வாய்ப்பு இல்லை'' என கூறியுள்ளார். மழை பெய்தால் அது தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு பெரும் சவாலாக இருக்கும். ஆனால் மழைக்கான வாய்ப்பு இல்லை என்பதால் அந்த கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஹேப்பியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications