ஜெ. பல்கலையை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கக் கூடாது : தனி ஒருவனாக தர்ணா செய்த சி.வி. சண்முகம் கைது
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கக் கூடாது என விழுப்புரத்தில் தன்னந்தனியாக தர்ணாவில் ஈடுபட்டுள்ள முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்: ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னந்தனியாக தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்களின் நலனுக்காக, முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், விழுப்புரத்தில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அதற்கு, துணைவேந்தர் நியமனமும் நடைபெற்றது.
ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். இதனைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
விழுப்புரம், கள்ளகுறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் சில நாட்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று சட்டசபை கூடியதும் 2021ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் திருத்த மற்றும் நீக்கறவு சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார். அத்துடன் 2021ஆம் ஆண்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தினை நீக்கறவு செய்வதெனவும் அரசு முடிவு செய்துள்ளது என சட்ட முன்வடிவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று சட்டசபை கூடியதும் 2021ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் திருத்த மற்றும் நீக்கறவு சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார். அத்துடன் 2021ஆம் ஆண்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தினை நீக்கறவு செய்வதெனவும் அரசு முடிவு செய்துள்ளது என சட்ட முன்வடிவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மசோதாவைக் கடுமையாக எதிர்க்கிறோம் என, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். இம்மசோதாவை ஆய்வுக்கு எடுக்கும்போது விரிவாகப் பேசலாம், வாய்ப்பு தருகிறேன் என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். ஆனால் ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் சட்டத்தை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கிறோம் என்று சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக தோல்வி... முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு..!
இந்த நிலையில் விழுப்புரத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று காலை தன்னந்தனியாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு பின்னால் சிலர் நின்று தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதையடுத்து அவரை விழுப்புரம் காவல்நிலைய காவலர்கள் கைது செய்து அழைத்துச் சென்று தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
சி.வி சண்முகம் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த அதிமுகவினர், காந்தி சிலை அருகே திரண்டு நின்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை விழுப்புரம் நகர காவலர்கள் கைது செய்து அதே தனியார் திருமண மண்டபத்தின் நுழைவாயிலில் அமர வைத்தனர்.