ரேஸ் விட்டா கேஸ் வரும்.. புள்ளிங்கோ கேங்குக்கு போலீஸ் கொடுத்த வார்னிங்! வாலை சுருட்டிக்கிட்டா நல்லது
விழுப்புரம்: தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாளை காணும் பொங்கல் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர் போலீசார்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் ஆகவும் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இன்றைய தினம் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இன்றைய தினம் திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகை:
15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்திற்காகவும், 16ஆம் தேதி காணும் பொங்கலை ஒட்டியும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 17 ஆம் தேதி வேலை நாள் வந்தது. அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் வார இறுதியில் காரணமாக 18, 19 விடுமுறை நாட்களாக இருந்தது. இந்த நிலையில் 17ஆம் தேதியையும் விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அன்றும் விடுமுறை அளிக்கப்பட்டது.
காணும் பொங்கல்:
இந்த நிலையில் காணும் பொங்கலை ஒட்டி சென்னை மெரினா கடற்கரை, கடலூர் சில்வர் பீச் மற்றும் பிற பகுதிகளில் உள்ள பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் திரள்வது வழக்கம். குறிப்பாக சென்னையில் மெரினா சாலை, விழுப்புரம் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் காணும் பொங்கல் அன்று இளைஞர்கள் தடையை மீறி ரேஸ் நடத்துவது வழக்கம். சென்னையில் பைக் ரேஸுக்கு ஏற்கனவே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
பைக் ரேஸ்:
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் எந்தப் பகுதியிலும் பைக் ரேஸ் நடத்தக்கூடாது என விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் கடுமையாக எச்சரித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,"பொங்கல் பண்டிகையை ஒட்டி விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை, எல்லீஸ்சத்திரம் புறவழிச்சாலை, அண்ணாமலை ஓட்டல் புறவழிச்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட எப்பகுதிகளிலும் யாரும் வாகன ரேஸில் ஈடுபடுவதோ நடத்துவதோ கூடாது. மீறுபவர்கள் மீது தேசிய நெடுஞ்சாலை சட்டத்தின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.
சென்னையில் கட்டுப்பாடுகள்:
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் காமராஜர் சாலையில் பொது மக்கள், சாலையில் அதிகமாகும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட மாட்டாது. ஆனால் மெரினா கடற்கரைக்கு வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் (மெரினா கடற்கரை சாலை) அதிகரிக்கும் போது போர்நினைவுச் சின்னத்தில் இருந்து (War Memorial) வரும் வாகனங்கள் வழக்கம் போல் கலங்கரை விளக்கம் (Light House) நோக்கி அனுமதிக்கப்படும்.
போக்குவரத்து மாற்றம்:
கலங்கரை விளக்கத்தில் (Light House) இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக கட்டாயமாக திருப்பப்பட்டு பாரதி சாலை, பெல்ஸ் சாலை, விக்டோரியா விடுதி வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம். வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை. பெல்ஸ் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (விக்டோரியா விடுதி சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்) என சென்னை காவல்துறை கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications