கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா - அரவாணை தரிசித்தால் தீராத நோய்கள் தீரும்
கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் சடங்குக்கு காரணமாக மகாபாரதப் போரின் பின்னணியில் புராணக் கதைகள் கூறப்படுகிறது.
விழுப்புரம்: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக திருநங்கைகள் தாலிகட்டும் நிகழ்வு இன்று நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து 20ஆம் தேதி காலை தேர் திருவிழாவும் தொடர்ந்து திருநங்கைகள் தாலி அறுத்து வெள்ளை சேலை உடுத்தும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கூவாகம் என்ற பகுதியில் இருக்கும் இந்த கூத்தாண்டவர் கோவில் திருநங்கைகளுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தக் கோவிலில் இருக்கும் மூலவர் அரவான். இங்கு சித்திரை மாதம் நடக்கும் திருவிழாவில், சித்ரா பௌர்ணமி நாளானது மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
அரவானை கணவனாக நினைத்துக்கொண்டு திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் சடங்கு இந்த கோவிலில் மிகவும் விசேஷம். இந்த சடங்கில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருநங்கைகள் கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்துள்ளனர்.
கூத்தாண்டவர் கோவில் அழகி போட்டி: சென்னை சாதனா மிஸ் கூவாகம் ஆக தேர்வு
கூத்தாண்டவர் கோவில் திருவிழா
கடந்த ஐந்தாம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியோடு கூத்தாண்டவர் கோவில் திருவிழா தொடங்கியது. கூவாகம், நத்தம், தொட்டி, குப்பம், வேலூர் உட்பட ஏழு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் தங்கள் வீடுகளில் இருந்து கூழ் குடங்களை ஊர்வலமாக கொண்டு வந்து கூத்தாண்டவர் கோவில் முன்பாக வைத்து படையல் செய்தனர். பின்னர் படையல் இடப்பட்ட கூழ் அங்குள்ள பெரிய கொப்பரையில் ஊற்றப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
தாலிகட்டும் திருநங்கைகள்
இந்த திருவிழாவிற்கு இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, கேரளா, பெங்களூர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து திருநங்கைகள் இங்கு வந்து குவிந்துள்ளனர். 18 நாட்களும் தினம் தினம் ஒரு நிகழ்ச்சி என கூவாகம் கிராமமே களைகட்டியுள்ளது. கூத்தாண்டவர் நினைத்ததை நிறைவேற்றுவதால் அவரை பக்தியுடன் ஆண்டுதோறும் விழா எடுத்து வழிபடுகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக இன்றைய தினம் திருநங்கைகள் தாலிகட்டும் நிகழ்வும் அதனை தொடர்ந்து 20ஆம் தேதி காலை தேர் திருவிழாவும் தொடர்ந்து திருநங்கைகள் தாலி அறுத்து வெள்ளை சேலை உடுத்தும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
விழுப்புரத்தில் குவிந்த திருநங்கைகள்
இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவியத் தொடங்கியுள்ளனர். கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் சடங்குக்கு காரணமாக மகாபாரதப் போரின் பின்னணியில் புராணக் கதைகள் கூறப்படுகிறது.
மகாபாரத் போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்காக அர்ஜூனனின் மகன் அரவான் பலிகொடுக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பலியிடப்படுவதற்கு முன்னர் அரவானின் இறுதி ஆசையான பெண்ணை மணந்து இல்லறவாழ்க்கையில் இணைவதற்காக கிருஷ்ணன், பெண் வேடம் ஏற்று வருகிறார். இந்தப் பின்னணியில்தான் திருநங்கைகள் இங்கு வந்து தாலி கட்டிக்கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது.
சித்ரா பவுர்ணமி
ஒவ்வொரு ஆண்டு சித்ரா பவுர்ணமியை ஒட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்க ஏராளமான திருநங்கைகள் வருவதுண்டு. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டு காலமாக விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதிலுமிருந்து வந்த திருநங்கைகள் அரவான் கோயிலுக்கு முன்பு தாலி கட்டிக்கொள்வர். அதன் தொடர்ச்சியாக மறுநாள் தாலி அறுத்து வெள்ளைச் சேலை உடுத்திக் கொண்டு சொந்த ஊர் திரும்புவார்கள்.
புராண நிகழ்வு
ராஜகுமாரன் என்று அழைக்கப்படுகிற அரவாண் அர்ஜுனனின் மகன். போரில் வெற்றி பெறுவதற்காக அரவாணை பலி கொடுக்க பாண்டவர்கள் முடிவு செய்கிறார்கள். அரவாணும் இதை மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்கிறான் ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கிறான். தான் இறப்பதற்கு முன், திருமணம் செய்ய வேண்டும் என்பதே. நாளை இறக்கப்போகும் ஒருவனை மணந்து அடுத்த நாள் விதவைக்கோலம் ஏற்க எந்தப் பெண்ணும் முன் வர மறுக்கிறாள். இதைப் பார்க்கும் கிருஷ்ண பகவான் பேரழகியாக மோகினி அவதாரம் எடுத்து அரவாணை மணந்து, தாம்பத்திய உறவு கொண்டு மறுநாள் விதவையாகிறார். அந்தக் கிருஷ்ண வடிவம் தான் திருநங்கைகள்! அதனை நினைவுகூறும் வகையிலேயே ஒவ்வொரு வருடமும் இந்த கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடைபெறுகிறது. அரவாண் களப்பலியும், திருநங்கைகள் திருமணமும், விதவை கோலம் பூணுவதும் நிகழ்கிறது.
தர்மர் பட்டாபிஷேகம்
அரவானை வணங்குவதன் மூலம் தீராத நோய்கள் தீரும் எனவும், குழந்தையில்லாப் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. உறுமைசோறு (பலிசாதம்) படையலில் படைக்கப்படும் பலகாரங்களையும், உணவையும் வாங்கி சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை பெருவிழா நிறைவடைகிறது.