ஷாக்.. "வாயில் துணி வைத்து.. கை, காலை கட்டிப்போட்டு எரிச்சிட்டாங்க".. விழுப்புரம் சிறுமி மரணம்
15 வயது சிறுமியை கட்டி வைத்து தீ வைத்துள்ளனர்
விழுப்புரம்: "நான் தனியா வீட்டில் இருந்தேன்.. அவங்க 2 பேரும் வந்து என் வாயில துணி வெச்சு அடைச்சாங்க.. கை, காலை கட்டிப்போட்டுட்டு தீ வெச்சு கொளுத்திட்டாங்க" என்று சிறுமி வாக்குமூலம் தந்துள்ளது விழுப்புரம் மாவட்டத்தை அதிர்ச்சி விலகாமல் வைத்துள்ளது. இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்!
Recommended Video
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது சிறுமதுரை கிராமம்.. இங்கு வசித்து வருபவர் ஜெயபால்.. இவரது மகள் ஜெயஸ்ரீ.. 15 வயதாகிறது.. 10 வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஜெயஸ்ரீ வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டிற்குள் இருந்து புகை வந்துள்ளது.. இதை பார்த்து பதறிய அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, ஜெயஸ்ரீ உடம்பெல்லாம் தீ பற்றி எரிந்துகொண்டிருந்தது.
நெருப்பில் வெந்து கொண்டிருந்த ஜெயஸ்ரீயை மீட்ட அவர்கள், உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்... தீவிரமான சிகிச்சையும் தரப்பட்டது. அதற்குள் தகவலறிந்து விழுப்புரம் மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.. ஜெயஸ்ரீயிடம் நேரிலேயே விசாரணையும் நடத்தினர்.
அப்போது, வீட்டில் தனியாக இருந்த தன்னை முருகன், கலியபெருமாள் 2 பேரும் கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு, பெட்ரோலும் ஊற்றி கொளுத்திவிட்டு சென்றதாக சொன்னார்.. ஜெயஸ்ரீ சொன்ன வாக்குமூலத்தை விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் அருண்குமார் பதிவு செய்து கொண்டார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகன், கலியபெருமாளை போலீசார் கைது செய்தனர். இதில், முருகன் என்பவர் அதிமுகவை சேர்ந்தவர் என தெரிகிறது.. கவுன்சிலராகவும் உள்ளாராம்.
இந்த சம்பவம் பற்றி ஜெயஸ்ரீயின் பெற்றோர் சொல்லும்போது, "எங்களுக்கும் அந்த 2 பேருக்கும் ஏற்கனவே பகை இருக்கிறது.. ஒருமுறை என் மகனைகூட அவர்கள் தாக்கிவிட்டனர்.. அவனை மீட்டு இதேபோல சிகிச்சை தந்து வருகிறோம்.
மகனை தாக்கிய இவர்கள் மீது ஸ்டேஷனில் புகார் தர போயிருந்தோம்.. அந்த ஆத்திரத்தில்தான் மகளை இப்படி தீ வைத்து வைத்து எரித்து விட்டனர்.. அவர்களை சும்மா விடக்கூடாது என்று கதறி அழுதனர். இதையடுத்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
"அந்த பொண்ணை நீ வேணும்னா".. காசியின் ஷாக் ஆடியோ.. வெளியிட்டது யார்.. பரபர தகவல்கள்
ஜெயஸ்ரீயின் அத்தை மஞ்சுளா சொல்லும்போது, "வாயில் துணியை அமுக்கிட்டு, கை காலை போட்டு தீ வைச்சு கொளுத்திட்டாங்களே.. என் புள்ளைய பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டங்களே,, முன்னாடியே பகை இருந்துச்சு.. எங்க மேல இருக்கிற கோபத்துல பச்ச புள்ளைய எரிச்சிட்டாங்களே" என்று கதறி அழுதபடியே சொன்னார். இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்!
95 சதவீதம் உடம்பெல்லாம் தீக்காயம் அடைந்த நிலையில்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.. இந்நிலையில் சிறுமியின் மரணம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதனால் கொலை வழக்காக இதை மாற்றி விசாரணை நடைபெறக்கூடும்... சிறுமி தந்த அந்த வாக்குமூலம்தான் வழக்கில் மிகப்பெரிய திருப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
நாளுக்கு நாள் லாக்டவுன் கிரைம்கள் அதிகமாக நடந்து வரும் சூழலில் இந்த விழுப்புரம் சம்பவமும் அதிர்ச்சியை தந்து வருகிறது.