வாத்தி ரெய்டு.. தொட்டுப் பாரு.. களத்தில் இறங்கி ‘கபடி’ விளையாடிய அமைச்சர் பொன்முடி!
விழுப்புரம் : விழுப்புரத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டு போட்டியினை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்து மாணவர்களுடன் இனைந்து கபடி விளையாடிய நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கலைஞர் கருனாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவிலான கபடி, கைப்பந்து, கால்பந்து, மல்லர் கம்பம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. விளையாட்டு போட்டியினை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, திமுக எம்.எல்.ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

இந்த விளையாட்டு போட்டிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பல்வேறு கல்லூரிகளை சார்ந்த மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். அப்போது கபடி விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கல்லூரி மாணவர்களோடு அவரும் கபடி பாடிக்கொண்டே ரெய்டு போனார்.
நானும் சேர்ந்து விளையாடுவேன், யாரும் என்னை அவுட் செய்ய கூடாது என கூறிக்கொண்டடே கபடி விளையாட்டு வீரர்களுடன் கபடி, கபடி என பாடியவாறு சென்றார் அமைச்சர் பொன்முடி. விளையாட்டு போட்டி நிகழ்வினை தொடங்கி வைத்தபோது அமைச்சர் பொன்முடி கபடி விளையாடியது அங்கிருந்த அனைவரின் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தபோது பாஜகவுடனான கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியுள்ளது குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, "தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவாக தெரியும், ஆகவே கூட்டணி பற்றி எங்களுக்கு கவலை இல்லை." என்றார்.

மேலும் பேசிய அமைச்சர் பொன்முடி, "தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நாடும் நமதே நாற்பதும் நமதே என்று கூறியபடி தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சிகள் இணைந்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications