கார் போக முடியாதா? உடனே ஆட்டோவில் ஏறிய அமைச்சர் மஸ்தான் - ஆனா.. “உட்கார்ந்த இடம்” அங்கதான் சிக்கலே!
விழுப்புரம்: அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஆட்டோவில் டிரைவர் அருகே அமர்ந்து பயணித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், மோட்டார் வாகனச் சட்ட விதிகளை மீறியதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் அருகே உள்ள புதுப்பேட்டை பகுதியில் தி.மு.க நிர்வாகி வெங்கடேசன் என்பவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதை அறிந்து அவரைக் காண அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார் அமைச்சர் மஸ்தான்.

அனந்தபுரம் வரை தனது காரில் சென்ற அமைச்சர் மஸ்தான், அங்கிருந்து தி.மு.க நிர்வாகி வெங்கடேசன் வீட்டிற்கு செல்லும் சாலை குறுகலாக இருந்ததால் காரில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஆட்டோ ஒன்றில் புதுப்பேட்டைக்கு செல்ல முடிவெடுத்த அமைச்சர், ஆட்டோ டிரைவருக்கு அருகே அமர்ந்துள்ளார். பின் சீட்டில் அமைச்சரின் பாதுகாவலர் உட்பட மூன்று அமர்ந்துள்ளனர்.
திமுக நிர்வாகியை பார்க்கச் செல்லும்போது கார் அந்த குறுகலான பகுதியில் செல்வது சிரமம் என்பதால் அமைச்சர் ஆட்டோவில் பயணித்த புகைப்படத்தை திமுகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
திமுகவினர் பெருமையாகப் பகிர்ந்த இந்தப் புகைப்படமே அமைச்சருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ ஓட்டுநர் இருக்கையில் ஓட்டுநருக்கு அருகே அமர்ந்து செல்வது மோட்டார் வாகன சட்டப்படி தவறு, அமைச்சரே இப்படி செய்யலாமா என விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.












Click it and Unblock the Notifications