பொங்கல் அதுவுமா இப்படியா நடக்கனும்? விழுப்புரத்தில் தடம் புரண்ட பயணிகள் ரயில்!
விழுப்புரம்: இன்று அதிகாலை விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி புறப்பட்ட பயணிகள் ரயில், தடம்புரண்டுள்ளது. ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
தற்போது பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக கீழே இறக்கிவிடப்பட்டு, ரயிலை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். பொங்கல் திருநாளில் திடீரென ஏற்பட்ட விபத்து பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் விபத்துக்கள்:
உலகின் மிகவும் பழமையான ரயில் போக்குவரத்தில் இந்தியன் ரயில்வேயும் ஒன்று. சுமார் 171 ஆண்டுகளாக இந்தியன் ரயில்வே பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. ஆனால், இதற்கு முன்னர் சந்தித்திராத அளவுக்கு தற்போது ரயில்வே துறை விபத்துக்களை எதிர்கொண்டிருக்கிறது. சரக்கு ரயில்கள் தொடங்கி பயணிகள் ரயில்கள் வரை விபத்தில் தொடர்ந்து சிக்கி வருகின்றன. இதனால் உயரிழப்புகள் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.
கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில் 288 பயணிகள் உயிரிழந்தனர். 1175 பேர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து ஆந்திராவில் ஏற்பட்ட விபத்துகளும் பெரியதாக பேசப்பட்டது.
விபத்துகளுக்கு காரணம்:
இந்த விபத்துகளுக்கு பல்வேறு காரணங்களை மத்திய அரசு கூறுகிறது. குறிப்பாக, ரயிலை கவிழ்க்க சிலர் சதி செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் ரயில்வே தொழிற்சங்கத்தினர் இதற்கு வேறு சில காரணங்களை சுட்டிக்காட்டுகின்றனர். அதாவது தண்டவாள பராமரிப்பு, போதிய ஊழியர்கள் இல்லாதது, குறைந்த ஊழியர்களை வைத்து அதிக நேரம் வேலை வாங்குவது, போதுமான வசதிகளுக்கு நிதி ஒதுக்காதது போன்றவை ரயில் போக்குவரத்தை தரமில்லாததாக மாற்றியிருக்கிறது என்று கூறுகின்றனர்.
உதாரணத்திற்கு சென்னையிலிருந்து மும்பைக்கு செல்லும் ரயில் பாதை மிக முக்கியமானது. நாட்டின் மொத்த ரயில்களில் 40% அளவுக்கு இதில்தான் இயக்கப்படுகிறது. ஆனால் இந்த தடத்தில் உள்ள தண்டவாளங்கள் போதுமான அளவுக்கு பராமரிக்கப்படுவதில்லை என்று தொழிற்சங்கத்தினர் கூறுகின்றனர்.
ஆட்கள் பற்றாக்குறையில் ரயில்வே துறை:
மேலும் அவர்கள் கூறுகையில், "தண்டவாளங்கள், சிக்னல்கள் உள்ளிட்டவற்றை பராமரிக்க போதுமான ஆட்கள் இல்லை. குறைந்தபட்சம் உள்ள ஆட்களும் ஒப்பந்த ஊழியர்களாக இருக்கிறார்கள். ஒப்பந்த ஊழியர்களுக்கும், நிரந்தர பணியாளர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த பணி வேறுபாடு ரயில் பயணித்தின் தரத்தில் எதிரொலிக்கிறது.
மறுபுறம் குறைந்த ஊழியர்களை கொண்டு அதிக நேரம் வேலை வாங்கப்படுகிறது. இதனால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகின்றன. உதாரணத்திற்கு லோகோபைலட்டுக்கு இத்தனை மணி நேரம்தான் பணி என்பது வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஆட்கள் இல்லாததால், அவர்கள் நீண்ட நேரத்திற்கு பணி செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர்" என்று கூறுகின்றனர்.
இத்தனை காரணங்களில் ஏதேனும் ஒன்றுதான் இன்று விழுப்புரத்தில் நடந்த விபத்துக்கும் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications